Mar 24, 2023 07:35 PM

பழைய சூரியை ஒரு துளி கூட பார்க்க முடியாது! - ‘விடுதலை’ படம் பற்றி மனம் திறந்த நடிகர் சூரி

பழைய சூரியை ஒரு துளி கூட பார்க்க முடியாது! - ‘விடுதலை’ படம் பற்றி மனம் திறந்த நடிகர் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்திலும் நடித்திருக்கும் ‘விடுதலை’ படத்தை ஆர்.எஸ்.இன்பொடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஓளிப்பதிவு செய்திருக்கிறார்.

 

இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் சூரி, தனது ‘விடுதலை’ பட அனுபவங்கள் குறித்து கூறுகையில், “வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. நான்கு காட்சியிலாவது அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். எனது விருப்பத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சாரிடமும், இணை இயக்குநர் மணிமாறன் சாரிடமும் அடிக்கடி சொல்வேன். அவர்களுடம் நிச்சயம் சாரிடம் சொல்வதாக சொல்வார்கள். அப்படி தொடர்ந்து அவர்களிடம் கேட்டு வந்த போது தான் ஒரு முறை வெற்றி சார் உங்களை கூப்பிடுவாரு, என்று இணை இயக்குநர் கூறினார். அதனால் அவருடைய அழைப்புக்காக காத்திருந்தேன். ஆனால், நாட்கள் போக போக, நானே அவரை தொடர்பு கொண்டேன். அப்போது தான் என்னிடம் ஒரு கதையை வெற்றி சார் சொன்னார். அப்போது அதில் இடம்பெற்ற கதாபாத்திரங்களில் நான் எதிர்பார்த்த வேடங்கள் எதிலும் நான் இல்லை. அப்படியானால் நான் என்ன வேடம் சார் செய்யப் போறேன், என்று கேட்ட போது, நீங்க தான் ஹீரோ என்று சொன்னார். அதை கேட்டதும் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. 

 

அந்த செய்தியை உடனே சிவகார்த்திகேயன், என் மனைவி என்று அனைவரிடம் சொல்லி மகிழ்ந்தேன். ஆனால், அந்த சந்திப்புக்கு பிறகு வெற்றிமாறன் சாரிடம் இருந்து எனக்கு அழைப்பே வரவில்லை. இரண்டு வருடங்கள் ஆகியும் அவர் என்னை அழைக்காததால், நானே அவரை சென்று பார்த்தேன். அப்போது தான் அந்த படத்தை கைவிடும் நிலையில் அவர் இருப்பதை என்னிடம் தெரிவித்தார்.  ஆனால், வேறு கதையை சொல்லி இந்த படத்தை பண்ணலாம் என்று சொன்னார். துபாயை கதைக்களமாக கொண்ட அந்த படத்திற்காக போட்டோ ஷூட் எல்லாம் நடத்தினோம். ஆனால், கொரோனா பரவலால் அந்த படமும் கைவிடப்பட்டது. பிறகு தான் விடுதலை படத்தின் கதை சொல்லி இதை செய்யலாம் என்று கூறினார். அப்படி தான் விடுதலை படத்தில் நான் நடிக்க தொடங்கினேன்.

 

‘விடுதலை’ படம் முதலில் சாதாரணமாக தான் தொடங்கியது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கி விஜய் சேதுபதி உள்ளே வந்த பிறகு மிகப்பெரிய படமாக வளர்ந்து விட்டது. படம் முடிய வருட கணக்கில் ஆனதாக சொல்கிறார்கள், அதற்கு காரணம் கதைக்களம் தான். நாங்கள் படமாக்கியது அடர்ந்த வனப்பகுதி மட்டும் அல்ல, மிகவும் ஆபத்தான பகுதியாகவும் இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்கு போவதற்கே பல மணி நேரம் ஆகும். அங்கு படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று மழை வந்துவிடும். அப்படி மழை வருவதுபோல் தெரிந்தாலே, அங்கிருந்து கிளம்பி விடுவோம். பிறகு அங்கு ஈரப்பதம் குறைந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு நடத்துவோம், மீண்டும் மழை வந்து படப்பிடிப்பு தடைபடும். இதனால் தான் காலதாமதம் ஆனது.

 

இந்த படத்தில் முதலில் நடிக்கும் போது எனது வழக்கமான பாணியில் தான் நடித்தேன். அதை பார்த்த வெற்றிமாறன் சார், நீங்க சூரி என்பதையே மறந்துடுங்க, குமரேசன் என்ற கதாபாத்திரத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நான் சொல்வதை மட்டும் செய்ங்க, என்றார். அதன்படி இரண்டு நாட்கள் தடுமாறிய பிறகு, வெற்றி சார் சொன்னபடியே சூரியை ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டு குமரேசனாக மாறி விட்டேன். படம் முழுவதும் முடிவடைந்த பிறகு என்னுடைய நடிப்பை பார்த்து வெற்றி சார் பாராட்டியதோடு, படத்தில் நடித்த கெளதம் மேனன் சாரும், ராஜீவ் மேனன் சாரும் எந்த இடத்திலும் சூரி போல் இல்லாமல் புதிய நடிகர் போல் தெரிவதாக பாராட்டினார்கள். நானும் டப்பிங் பேசும் போது என்னுடைய போஷனை பார்த்தேன், ஒரு புதிய சூரியை பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. நிச்சயமாக சொல்கிறேன் ‘விடுதலை’ படத்தில் பழைய சூரியை துளி கூட உங்களால் பார்க்க முடியாது.

 

எனக்கு ஏற்கனவே ஹீரோவாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதிலும் காமெடியாக நடிப்பது போல தான் இருந்தது. அதனால் தான் அந்த படங்களை நிராகரித்தேன். காமெடி வேடத்தை தாண்டிய ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க முயற்சித்தேன். ஆனால், அவர் என்னை கதாநாயகனாகவே நடிக்க வைத்தது பெரும் மகிழ்ச்சி. அதற்காக தொடர்ந்து கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்று சொல்ல மாட்டேன். காமெடியனாகவும் தொடர்ந்து நடிப்பேன். 

 

Actor Suri in Viduthalai

 

விடுதலை படத்திற்காக நான் நிறைய படங்களை விட்டுவிட்டதாக சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தாலும் அதை நானாகத்தான் செய்தேன். இந்த படத்திற்காக எந்த படத்தையும் விடாதீர்கள் என்று என்னிடம் வெற்றிமாறன் சார் சொல்வார். எதாவது பட வாய்ப்புகள் வந்தால் அவரிடம் சொல்வேன், அவர் உடனே அதில் நடித்துவிட்டு வாங்க என்று சொல்லிவிடுவார். அப்படித்தான் ரஜினி சார் படத்தில் நடித்தேன். ஆனால், சில படங்களை பற்றி நான் அவரிடம் சொல்ல மாட்டேன். காரணம் எனக்காக அவர் இந்த படத்தை தள்ளி வைத்துவிடுவாரோ என்ற பயம் தான், மற்றபடி விடுதலை படத்திற்காக நானாகத்தான் சில படங்களில் நடிக்கவில்லை.

 

விடுதலை படத்தில் வெற்றிமாறன் சார் என்னை ஹீரோவாக்கியது ஏன்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். என் மனைவி குட என்னிடம் இதை கேட்டார். என் மனதிலும் அந்த கேள்வி எழுந்தது. அதனால் நானே ஒரு நாள் வெற்றிமாறன் சாரிடம் கேட்டேன். அப்போது அவர் சொன்னது இரண்டு விஷயங்கள், ஒன்று என் உடல் தகுதி மற்றொன்று என் முகத்தில் இருக்கும் அப்பாவித்தனம். இந்த இரண்டுக்காக தான் அவர் என்னை இந்த படத்தில் ஹீரோவாக்கினேன் என்று சொன்னார். உடல் தகுதியை கூட உடற்பயிற்சி மூலம் வரவைக்கலாம், ஆனால் அந்த அப்பாவித்தமான முகம் எந்த பயிற்சி செய்தும் வரவைக்க முடியாது, அது இயல்பாகவே சூரிக்கு இருக்கிறது, அதனால் தான் இந்த கதாபாத்திரத்திற்கு சூரியை தேர்வு செய்ததாக இணை இயக்குநரிடமும் வெற்றி சார் சொல்லியிருக்கிறார்.

 

விடுதலை படத்தில் ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள் இருக்கிறது. அதிலும் குறுகிய தெருக்களில் ஓட வேண்டும், ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு தாவ வேண்டிய காட்சிகள் எல்லாம் இருக்கிறது. பல கேமராக்களை வைத்து அந்த காட்சிகளை படமாக்கினார்கள். பாதுகாப்பாக சண்டைக்காட்சிகளை படமாக்கினாலும், எப்படியாவது அடிபட்டு விடும். அப்படி பல முறை கீழே விழுந்து உடல் முழுவதும் பல இடங்களில் தையல் போட்டிருக்கிறேன். ஆனால், படத்தில் அந்த காட்சிகளை பார்க்கும் போது கஷ்ட்டப்பட்டதற்கு பலன் கிடைத்ததாகவே நினைக்கிறேன்.

 

இசை வெளியீட்டு விழாவில் எனது ரசிகர்கள் வந்திருந்தது பற்றி பேசுகிறார்கள். நான் ஹீரோவாக நடித்திருப்பதால் ரசிர்களை அழைத்து வரவில்லை. என் ரசிகர்கள் பல ஊர்களில் இருக்கிறார்கள், அவர்கள் என் பெயரில் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அப்போது என்னை தொடர்புகொண்டு மன்றம் தொடங்க அனுமதி கேட்டார்கள். ஆனால், நான் அதற்கு மறுத்துவிட்டேன். நீங்க நல்லது செய்யறது சந்தோஷமான விஷயம் தான். ஆனால் முதலில் உங்க குடும்பத்தை பாருங்க, பிறகு நல்லது செய்ங்க என்று சொல்லிடுவேன். ஆனால், இந்த முறை அவர்கள் நாங்க உங்க நிகழ்ச்சியை பார்க்க சென்னைக்கு வர வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்கள். எனக்காக பல நல்ல விஷயங்களை செய்யும் அவங்களுக்காக நான் இதை கூட செய்யலனா எப்படி, அதனால் தான் அவர்களை வர வைத்தேன். அப்படி வந்தவங்க, அவங்க சொந்த பணத்துல தான் பஸ் வச்சி வந்தாங்கல தவிர நான் செலவு செய்து அவங்களை அழைத்து வரவில்லை.

 

தொடர்ந்து ஹீரோவாகவும் நடிப்பேன், காமெடி வேடத்திலும் நடிப்பேன். ஆனால், ஹீரோவாக நடிக்கும் படங்களில் வழக்கமான காமெடி வேடத்தில் நடிக்க கூடாது என்று நினைத்திருக்கிறேன். காமெடியை கடந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். அதற்கு ஏற்றவாறு சில கதைகளும் வந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படத்தில் நாயகாக நடிக்கிறேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன், அந்த படங்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார்.