May 25, 2024 07:37 PM

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படப்பிடிப்பு முடிவடைந்தது!

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படப்பிடிப்பு முடிவடைந்தது!

2டி சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில், ‘96’ பட இயக்குநர் பிரேம் இயக்கும் இரண்டாவது படத்தில் நாயகனாக கார்த்தி நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது. ‘மெய்யழகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 

கார்த்தியுடன் மிக முக்கியமான வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் இப்படத்தில், ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷ்னி, ஜெயபிரகாஷ், ஶ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி, ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

Meiyazhagan

 

ச.பிரேம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார். கார்த்திக் நேத்தா மற்றும் உமாதேவி பாடல்கள் எழுதுகின்றனர். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணை தயாரிப்பை கவனிக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், சிவகங்கை பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

இப்படம் பற்றி படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கூறுகையில், ”கார்த்தி மற்றும் அரவிந்த் ஸ்வாமி தங்களது சிறந்த நடிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இறுதி வடிவத்தை கண்ட இயக்குநர் பிரேம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நமது சொந்தங்களின் முக்கியத்துவத்தையும், பண்பாட்டு வேர்களையும் வலியுறுத்தக்கூடிய ஒரு நல்ல குடும்பப் படமாக இது இருக்கும்.” என்றார்.