அஜித்துக்கு வந்த புது ஆசை!
அஜித்தின் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ படம் இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதேபோல், இந்த படத்தில் அஜித் தான் நடிக்க ஆசைப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததுதான். தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் அஜித், அப்படத்திற்குப் பிறகு, அதாவது அவரது 61 வது படம் குறித்து தனது ஆசையை தெரிவித்திருக்கிறார்.
அதன்படி, அஜித்தின் 61 வது படமும் ரீமேக் படமாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் விருது பெற்ற இந்தி படமான ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தை ரீமேக் செய்து நடிக்க அஜித் விரும்புகிறாராம். இப்படத்தின் உரிமையும் போனி கபூரிடம் இருப்பதால், உரிமையை வாங்க எந்த பிரச்சினையும் இல்லையாம். மேலும், போனி கபூரிடம் இருந்து வேறு ஒரு தயாரிப்பாளர் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்று அஜித்துக்காக தயாரிக்க இருக்கிறாராம்.
இப்படம் அஜித்தின் இமேஜுக்கு சரியாக இருப்பதோடு, வித்தியாசமான கதையாக இருப்பதால், நிச்சயம் ‘நேர்கொண்ட பார்வை’ போல பெரிய வெற்றி பெறும் என்று பலர் கருத்து தெரிவித்திருப்பதால், அஜித்தும் இப்படத்தில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 60 வது படத்தில் நடித்து வரும் அஜித், அப்படத்திற்கு பிறகு தனது 61 வது படமாக ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தில் நடிப்பதோடு, அதை வெங்கட் பிரவை இயக்க வைப்பார் என்றும் கூறப்படுகிறது.