மாலை கூட வாங்க முடியவில்லை! - நடிகர் அபி சரவணன் கண்ணீர்

பிரபல கிராமிய பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா அவர்களின் இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட நடிகர் அபி சரவணன், இறுதி காரியங்கள் முடியும் வரை அங்கேயே இருந்து தற்போது தான் மதுரை புறப்பட்டார்.
பரவை முனியம்மாவின் இறப்பு குறித்து அபி சரவணன், தனது முக புத்தக பதிவில், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக தகவல் வந்தது.
உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. அதிர்ந்துபோனேன்.. உடைந்து போனேன்.. அப்பத்தாவின் இறுதி மூச்சு பிரிந்ததை அறிந்து இறுக்கத்துடன் கிளம்பினேன் .
ஒரு மாலை கூட வழியில் வாங்க இயலாத கையாலாகாத பேரனாய் பரவை முனியம்மா பாட்டியை பார்க்க சென்றேன்.
சென்ற வழி எல்லாம் நினைவுகள் அபி அபி என்று அழைத்து வந்த ஆறுதலான வார்த்தைகள், அன்பான சிரிப்பு. இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில் வைத்திருந்த போது கூட அபி தைரியமாக கோர்ட்டுக்கு சென்று வா. அப்பாத்தா நான் இருக்கிறேன் எதுவானாலும் பார்க்கலாம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் கொடுத்தார். இன்று உயிரோடு இல்லை.
இறுதி ஊர்வலம் இடுகாடு இறுதி மரியாதை இன்றுடன் எல்லாமே முடிந்தது.
கண்ணீருடன் பேரன் அபி சரவணன்., என்று தெரிவித்துள்ளார்.