Nov 24, 2021 04:42 PM

நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்! - உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்! - உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார். 

 

இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூரலிகானின் வீடு, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, தனது வீட்டில் மாட்டிக்கொண்ட தான் வளர்க்கும் பூனையை மீட்கபதற்காக வீட்டை திறக்க வேண்டும், என்ற கோரிக்கையும் வைத்தார்.

 

வெளிநாட்டை சேர்ந்த மன்சூரலிகானின் செல்ல பூனை அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி, பூனையை மீட்பதற்காக 1 மணி நேரம் மட்டும் வீட்டை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார். ஆனால், பூனை ஒரு மாதமாக உணவு இன்றி உயிரிழந்ததால், நீதிமன்றம் அறிவித்தது போல், தனது வீட்டை திறக்க வேண்டாம், என்று மறுப்பு தெரிவித்த மன்சூரலிகான், அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு கடிதமும் கொடுத்து விட்டார்.

 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் மன்சூரலிகான், ”தான் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இடத்தில் முறையாக அனுமதி பெற்று வீடு கட்டினேன். இன்று வரை சொத்து வரி உள்ளிட்ட வரிகள் கட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அந்த சொத்தை வாங்கியவர்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சனை காரணமாக, என் வீட்டின் மீது தவறான தகவல்களையும், புகார்களையும் பரப்பி, என் வீட்டுக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் என்னை போன்று தான் வீடு கட்டியுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்படவில்லை. காரணம், நான் ஒரு நடிகன் என்பதால் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை கொடுத்திருக்கிறார்கள்.

 

இது தொடர்பாக போராட்டம் நடத்தி தீர்வு காணும்படி, என் நண்பர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களுக்காக போராடி வரும் நான், எனக்காக போராட விருப்பம் இல்லை. இருந்தாலும், இந்த பிரச்சனையை உச்ச நீதிமன்றம் மூலம் நிச்சயம் தீர்வு காண்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.