May 03, 2021 07:01 AM

”மக்களின் தலைவன் என்பதை நிரூபித்தார் அண்ணன் ஸ்டாலின்” - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து

”மக்களின் தலைவன் என்பதை நிரூபித்தார் அண்ணன் ஸ்டாலின்” - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதோடு, தனி பெரும்பான்மையோடு திமுக ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எதிர்ப்பார்த்தது போல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக-வுக்கு என் வாழ்த்துகள்.

 

கலைஞருக்கு பிறகு தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டு விட்டது, என்று புறம் பேசியவர்களை புறம் தள்ளிவிட்டு, தனது களப்பணியை தொடர்ந்த அண்ணன் மு.க.ஸ்டாலின், இந்த மாபெரும் வெற்றி மூலம், தான் மக்களின் தலைவன், என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

அண்ணாவின் ஆற்றல், கலைஞரின் செயல்திறன் ஆகியவற்றை பெற்றிருக்கும் தலைவர் ஸ்டாலின், தனது அயராத உழைப்பின் மூலமாக இத்தகைய மாபெரும் வெற்றியை பெற்று திமுக என்ற மாபெரும் ஆலமரத்திற்கும், அதன் விழுதுகளுக்கும் புதிய நீர் பாய்ச்சியிருக்கிறார்.

 

திமுக மற்றும் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது இந்த வெற்றி தொடர வேண்டும், தமிழகம் மீண்டும் பலம் பெற்று வளம் பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.