Mar 13, 2020 04:46 AM

சாதி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சூர்யா!

சாதி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சூர்யா!

திரைப்படங்களில் சாதி பாகுபாடு பார்க்க கூடாது, என்பதை மறைமுகமாக சொல்லி வந்த நிலையில், தற்போது பல திரைப்படங்களில் நேரடியாகவே சொல்லி வருகிறார்கள். இதனால், மேல் சாதி என்று சொல்லக்கூடியவர்கள் கடும் கோபமடைந்திருப்பதோடு, அப்படிப்பட்ட படங்களுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

 

சாதி பிரிவினை, ஆணவக் கொலை போன்றவற்றுக்கு எதிரான படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஆணவக் கொலையை ஆதரிக்கும் வகையிலும், சாதி இருக்கிறது, இருக்க வேண்டும், என்பதை வலியுறுத்தும் வகையிலும், சமீபத்தில் ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டியிருக்க, அப்படிப்பட்ட படங்கள் இனி வரிசைக் கட்டி நிற்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், இந்த சாதி சர்ச்சையில் நடிகர் சூர்யாவும் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இறுதிச் சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’ இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் இடம்பெறும் “மண்ணுருண்ட மேல...” என்று பாடல் வெளியாகியுள்ளது.

 

என்னதான் சொத்து, பணம் இருந்தாலும், மனுஷனுக்கு இறுதியில் ஆறடி மண் தான் சொந்தம், என்ற கருத்தை வலியுறுத்தும் இப்பாடலில் மேல் சாதி, கீழ் சாதி பிரிவினை குறித்த வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதால், இப்பாடலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

இப்பாடலால், சாதி மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புகார் தெரிவித்திருப்பவர்கள், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளார்கள்.

 

அதே சமயம், ஆணவக் கொலைக்கு எதிரான படமாக சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘கன்னி மாடம்’ படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட், நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, சூர்யாவின் சூரரைப் போற்று, பாடலை வரவேற்றதோடு, அப்பாடலை பெரிய அளவில் வைரலாக்க வேண்டும், என்று கூறினார்.