நடிகை ரோஜாவின் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் ஆந்திர மக்கள்

ஆந்திர அரசியலில் லேடி சூப்பர் ஸ்டாராக நடிகை ரோஜா உருவெடுத்திருக்கிறார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான ரோஜா, அங்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்ததோடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராகவும் உருவெடுத்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலிலும், நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ரோஜா, தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அமைச்சரான ரோஜா தெலுங்கு டிவி சேனலில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ’ஜபர்தஸ்த்’ (Jabardasth) நிகழ்ச்சியின் நடுவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
ரசிகர்களிடம் பெரும் ஆதரவு பெற்ற நிகழ்ச்சியாக விளங்கிய இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை ரோஜாவும், நடிகர் நாக பாபுவும் இருந்தனர். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே நடுவர்களாக இருந்த இவர்கள் அரசியல் பணி காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்கள்.
இதனையடுத்து இந்த நிகழ்ச்சியின் புதிய நடுவர்களாக நடிகைகள் மீனா மற்றும் சங்கவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே சில எபிசோட்களில் மீனா கலந்துக்கொண்ட நிலையில், இனி சங்கவியும் கலந்துக் கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பேவரைட் நிகழ்ச்சியான இது, ஆந்திர மக்களின் பேவரைட் நடிகையான ரோஜா திடீரென்று விலகியது, ஆந்திர மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.