சக்சஸான ஏ.ஆர்.முருகதாஸ் திட்டம்! - அச்சத்தில் பாலிவுட் நடிகர்கள்

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழும் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்தை வைத்து இயக்கியிருக்கும் ‘தர்பார்’ பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையில் படமாக்கப்பட்டிருப்பதோடு, கதையும் மும்பையில் நடப்பது போல தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தை பத்திரிகையாளர்களிடம் கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தமிழகத்தில் ரஜினி சாரை வைத்து படப்பிடிப்பு நடத்துவது என்பது ரொம்ப கஷ்ட்டமான விஷயம். அதே சமயம் சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கான லொக்கேஷன்களும் குறைவு தான். இதற்காக தான் மும்பையை கதைக்களமாக தேர்வு செய்தேன்.
அதுமட்டும் இன்றி, ரஜினி சார் தமிழகத்து நடிகர் மட்டும் அல்ல, அவர் ஃபேன் இந்தியா நடிகர். அவரது படங்கள் ஆந்திரா, கர்நாடகா, மும்பை என்று இந்தியா மட்டும் இன்றி ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பு பெறுவதால், தமிழகத்தை தாண்டிய ஒரு இடத்தை கதைக்களமாக தேர்வு செய்தோம்.” என்றார்.
ரஜினிகாந்தின் சமீபத்திய படங்களில், ‘தர்பார்’ படத்திற்கு பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், படக்குழுவும் மும்பையில் புரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருவதற்கு காரணம், பாலிவுட் மார்க்கெட்டை கைப்பற்றுவதற்கு தானாம்.
இதுவரை எந்த ஒரு ரஜினி படமும் செய்யாத சாதனையை ‘தர்பார்’ பாலிவுட்டில் நிகழ்த்தும் என்று கூறப்படுகிறது. இதற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆரம்பத்தில் இருந்தே திட்டம் போட்டு பணியாற்றியதோடு, சமீபத்தில் வெளியான டிரைலரிலும் அதை பின் பற்றியிருக்கிறாராம்.
அவர் திட்டமிட்டது போலவே பாலிவுட்டில் ‘தர்பார்’ டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதையும், படத்திற்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதையும் பார்த்து பாலிவுட் நடிகர்கள் அச்சமடைந்திருக்கிறார்களாம்.