’மாஃபியா’ வின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் அருண் விஜய்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘மாஃபியா’ பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கும் இப்படத்தின் வெற்றியை அருண் விஜய் ரசிகளுடன் கொண்டாடும் விதமாக, திரையரங்களுக்கு விசிட் செய்து வருகிறார்.
அந்த வகையில், சென்னையில் பல திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்த அருண் விஜய், சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்தார்.
இது குறித்து அருண் விஜயிடம் கேட்டதற்கு, “கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய நட்சத்திரங்களை கண்மூடித்தனமாக கொண்டாடுவதில்லை. அவர்கள் தரமான படங்களையே கொண்டாடுவார்கள். நல்ல படங்களுக்கு பெரும் வரவேற்பு தருவார்கள். நான் அவர்களை சந்தித்தபோது அவர்கள் காட்டிய அன்பில், உணர்வுகளின் குவியலில் சிக்கி மனம் நெகிழ்ந்து போனேன். அவர்கள் தந்த வரவேற்பும், அன்பும் மறக்க முடியாதது. பலர் தனித்தனியாக வந்து படத்தின் தொழில்நுட்ப அம்சங்களை தனித்தனியே குறிப்பிட்டு பேசியது பெரும் ஆச்சர்யமாக இருந்தது. தயாரிப்பு தரப்பான Lyca Productions மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு பெரும் நன்றிகள். என் தந்தை என்னிடம் அடிக்கடி “உண்மையான வெற்றி என்பது தியேட்டர் உரிமையார்களின் முகத்தில் வழியும் புன்னகையில் இருக்கிறது” என்பார். அதை நேரில் கண்டபோது உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியது. முன் திரையிடல் காட்சிகள், விமர்சனங்கள், ரசிகர்களின் கொண்டாடங்களுக்கு பிறகு கோயம்புத்தூர் முதலாக அனைத்து இடங்களிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்திய செய்திகள் மேலும் மகிழ்ச்சியை கூட்டியுள்ளது.” என்றார்.