கதை திருட்டை தொடர்ந்து டைடில் திருட்டு! - சர்ச்சையில் சிக்கிய சூர்யா

தமிழ் சினிமாவில் கதை திருட்டு பஞ்சாயத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த சூர்யாவின் பெயர் தற்போது தொடர்ந்து அடிபட்டு வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் கதை, வேறு ஒருவர் எழுதிய கதை என்று, ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அந்த நபர் வெளியிட்ட பதிவு தொடர்பாக சில இணையதள ஊடகங்களில் செய்திகள் வெளியானாலும், அது பற்றி சூர்யாவோ அல்லது வெற்றி மாறனோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பு ‘அருவா’ என்று வைக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், அந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு திரைப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாடலாசிரியரும் ’கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ என்ற படத்தை இயக்கிவருமான ஏகாதசி ‘அருவா’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் தருண் கோபி தயாரித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு பெரிலின் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டு விருது பெற்ற இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதே தலைப்பில் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணி புதிய படத்தை அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்கல் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், தற்போது தலைப்பு திருட்டிலும் சிக்கியிருப்பது வியப்பாக உள்ளது.
இது தொடர்பாக சூர்யா நடிப்பில் உருவாக உள்ள ‘அருவா’ திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் ஞனானவேல்ராஜா எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.