Nov 19, 2021 05:30 PM

ஆர்யா, இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இணையும் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு

ஆர்யா, இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இணையும் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு

’டெடி’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா இரண்டாவது முறையாக இணைந்திருப்பது அனைவரும் அறிந்தது தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ள நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பை வட இந்திய மாநிலங்களில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

இந்த நிலையில், படத்திற்கு ‘கேப்டன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழு, டைடில் டிசனையும் வெளியிட்டுள்ளது.

 

நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் (The Show People) மற்றும் திங் ஸ்டுடியோஸ் (Think Studios) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

 

படம் குறித்து கூறிய இயக்குநர் சக்தி செளந்தர், “’கேப்டன்’ எனும் தலைப்பு நேர்த்தியானது, நிஜத்தில் பல விசயங்களில் மிகப்பெரும் மதிப்பை கொண்டிருக்கும் தலைப்பு இது. ஒரு விளையாட்டு குழுவில் ஆரம்பித்து, சமூகத்தின் எந்த ஒரு குழுவிலும், கேப்டன் எனும் பொறுப்பு மிக முக்கியமானது. அது வெறும் தலைமை என்கிற இடம் கிடையாது. மொத்த குழுவையும் வழிநடத்தி செல்லும் கடமை கொண்ட, மிகமுக்கியமான பொறுப்பு. இது அப்படியே படத்தில் ஆர்யா ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். தலைப்பு ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம், அதுதான் ரசிகர்களை படம் நோக்கி ஈர்க்கும் மிக முக்கியமான கருவி, அதிலும் OTT தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் திரைப்படங்கள் மொழி, நாடு, இன எல்லைகளை கடந்து உலகின் பல முனைகளுக்கும் எளிதாக சென்று சேர்கிறது. ஆனால் அங்குள்ள ரசிகர்களை படத்தை நோக்கி இழுக்கும் முதல் அம்சமாக இருப்பது, படத்தின் தலைப்பு தான். எல்லாவற்றையும் தாண்டி இந்த கதையும், களமும் இந்த தலைப்பு 100 சதம் பொருத்தமானது என்பதை நிரூபிக்கும்.” என்றார்.

 

Captain

 

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கலை கார்கி எழுதுகிறார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.