ஆர்யா, சிம்ரன் நடிக்கும் காதல் படம்!

திருமணத்திற்காக டிவி சேனலில் பெண் தேடும் ஆர்யா, முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகும் படம் ஒன்றில் நடிக்கிறார். அவருடன் சிம்ரனும் நடிக்கிறார். ஆனால், ஹீரோ ஹீரோயினாக அல்ல, சிறப்பு தோற்றத்தில்.
ஆம், மறைந்த இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஜீவாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் ஆ.இலட்சுமி காந்தன். அஜ்மல், பசுபதி நடித்த ‘4777’ படத்தை இயக்கிய இவர், தற்போது ‘புறா பறக்குது’ என்ற தலைப்பில் புது படம் ஒன்றை இயக்குகிறார்.
புதுமுகங்கள் ஆருண், கெளதம் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் பப்லு, பிரியா, சுப்புலட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள். இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெய் கிரிஷ் இசையமைக்க, கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
காதல் என்பது அமுதசுரபி மாதிரி, அதனால் தான் காதலை மையமாக வைத்து ஆயிரக்கணக்கில் படங்கல் வெளியாகியுள்ளன. இன்னும் ஆயிரம் படங்கள் உருவாகவும் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு காதல் கதையை தான் நான் கையில் எடுத்திருக்கிறேன், என்று கூறும் இலட்சுமி காந்தன், முதல் காட்சியில் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை பார்த்ததுமே இவள் தான் தனக்கானவள் என முடிவு செய்யும் இளைஞன், கடைசி காட்சியில் அவளிடம் ஐ லய் யூ சொல்கிறான். இது தான் படத்தின் கதை, என்று படம் குறித்து கூறினார்.
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா, சிம்ரன், ஷ்யாம், பூஜா, பிரசன்னா, பசுபதி, அஜ்மல், மீனாட்சி, அசோக், மைக்கேல், வி.ஜே முரளி என பெரிய நட்சத்திர பட்டாளம் இடம்பெற போகிறார்களாம். அது எதனால் என்பது சஸ்பென்ஸாம்.
சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.