Apr 24, 2019 01:19 PM

பாக்யராஜ் சிஐடி அதிகாரியாக நடிக்கும் ’எனை சுடும் பனி’!

பாக்யராஜ் சிஐடி அதிகாரியாக நடிக்கும் ’எனை சுடும் பனி’!

எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ராம்ஷேவா இயக்கும் படம் ‘எனை சுடும் பனி’. இதில் ஹீரோவாக வெற்றி நடிக்கிறார். இவர் ஏற்கனவே, ராம்ஷேவா இயக்கிய ‘டீ கடை பெஞ்ச்’ படத்தில் இரண்டாவது கதாநாயகனாகவும், ‘என் காதலி சீன் போடுறா’ படத்தில் முக்கிய போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயின்களாக உபாசனா ஆர்.சி, சுமா பூஜார் ஆகியோர் நடிக்க, சிபிஐ அதிகாரியாக கே.பாக்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம்புலி, மனோபாலா, சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

வெங்கட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அருள்தேவ் இசையமைக்கிறார். ராம்ஷேவா, வசந்த், கானா சரண் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். அன்பு கலையை நிர்மாணிக்க, சாண்டி, சிவசங்கர், லாரன்ஸ் சிவா ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள். ஜீவா தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

 

Ennai Sudum Pani

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ராம்ஷேவா படம் குறித்து கூறுகையில், ”சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் வெற்றியும், உபாசனாவும். உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார். வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும், இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன். அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பது திரைக்கதை சுவாரஸ்யம்.

 

இந்த திரைக்கதையில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதும் படத்தின் சுவாரஸ்யம்.” என்றார்.

 

இன்று படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற பூஜையில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

Ennai Sudum Pani Movie Pooja

 

சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.