‘ரெட்ட தல’ எனக்கு சவாலாக இருந்தது - நடிகர் அருண் விஜய்
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’.
வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைபிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில், “திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குனர். கஜினி, துப்பாக்கி படத்தில் பணி புரிந்தார் எனக்கு மிகவும் பிடித்தமானவர். மிகவும் திறமைசாலி, இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது தான். அதைக் கேட்டதும் கண்டிப்பாக கொடுப்பேன் என்று அவருக்கு தெரியும். இந்தப் படத்திற்கு அது சரியாக பொருந்தியுள்ளது. கூடிய விரைவில் என்னுடைய தயாரிப்பிலும் ஒரு படம் இயக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அருண் விஜய் 15 வருடங்களுக்கு பின்னும் அதே போல, இன்னும் அப்படியே இளமையாக இருக்கிறார். மிகப்பெரும் ஆச்சர்யம் தான். அவர் ஒரு கடின உழைப்பாளி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தமிழ் சினிமாவில் அவருக்கு இன்னும் பெரிய இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன். படத்தில் பணி புரிந்த அத்தனை நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் படத்திற்கு பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர், கண்டிப்பாக பெரியவெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி.” என்றார்.
இயக்குநர் முத்தையா பேசுகையில், “’ரெட்ட தல’ படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன் நன்றாக இருந்தது. இயக்குநர் திருவை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். இருவரும் உதவி இயக்குநராக இருந்ததிலிருந்து பழகி வருகிறோம். இந்த படம் நிச்சயம் அவருக்கும், அருண் விஜய்க்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமையும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.” என்றார்.
இயக்குநர் கிஷோர் முத்துராமன் பேசுகையில், “இந்தப் படத்தின் தலைப்பில் அஜித் சாரை வைத்து, இயக்குநர் முருகதாஸ் இயக்குவதாக நிறைய செய்திகள் கேட்டேன். இன்று அதே பெயரில் அருண் விஜய்யை வைத்து, இயக்குநர் திரு இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் உலகத்திரத்தில் இருக்கிறது, கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும். அனைவருக்கும் என் வாழ்த்துகள் நன்றி.” என்றார்.
இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், “இந்ததலைப்பு எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திற்காக அருண் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இரண்டு கதாபாத்திரங்களாக நடிப்பதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். உங்களின் பொறுமைக்கு இந்தப் படம் ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்கும். இயக்குநர் திருவின் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரத்தில் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படமும் அப்படிதான் இருக்கிறது. பல வருடங்களாக வெளிநாடுகளில் பாடல் எடுப்பதில்லை. இந்தப் படத்தில் அந்தப் பாடல் இன்னும் கூடுதல் சிறப்பு. சில படங்கள் ஆண்டின் இறுதியில் வரும், அது அந்த வருடத்தில் வெளியான அனைத்து படங்களையும் மறக்கடித்து விடும், அது போல இந்தப் படம் இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் கோகுல் பேசுகையில், “இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும், ஏனென்றால் அப்போது தான் தயாரிப்பாளர் எனக்கொரு படம் கொடுப்பார். எனவே இந்த படம் வெற்றி பெற தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். அருண் விஜய் ஒரு நல்ல உழைப்பாளி, அவரின் உழைப்பிற்கு இந்தப்படம் ஒரு சான்று. அவருடன் எனக்கும் ஒரு படம் பண்ண ஆசை இருக்கிறது, கண்டிப்பாக இணைவோம் என்று நம்புகிறேன். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. படம் டெக்னிக்கலாக சிறப்பாக உள்ளது. கண்டிப்பாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் இந்தப் படம் வெற்றியைக் கொடுக்கட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் ஏ ஆர் கே சரவணன் பேசுகையில், “அருண் விஜய் சாரை நன்றாகத் தெரியும். அவரைப் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன். அவரது முயற்சி இன்னும் என்னை வியக்க வைக்கிறது. கண்டிப்பாக அவர் மிகப்பெரிய உச்சத்தை அடைவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கதாநாயகி சித்தி நல்ல குணசித்திர முக பாவனை கொண்ட நடிகை. ஸ்க்ரீனில் அது நன்றாக தெரிகிறது. பாடல்கள் காட்சிகள் என அனைத்தும் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.” என்றார்.
இயக்குநர் அறிவழகன் பேசுகையில், “ஒரு உதவி இயக்குநருக்கு அவருடைய இயக்குநரின் தயாரிப்பில் படம் இயக்குவது என்பது ஒரு அதிர்ஷ்டம், எனக்கும் திருவிக்கும் அது அமைந்தது. நானும், திருவும் நீண்ட கால நண்பர்கள். கண்டிப்பாக எனக்கு இது மகிழ்வான தருணம். அருண் விஜய் சாரை பற்றி பல நண்பர்கள் மூலம் பேசி கேட்டிருக்கிறேன், அவருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தை உருவாக்குவேன். இந்தப் படம் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் பாபி சாருக்கு வாழ்த்துகள். மேலும் மேலும் படங்களை அவர் தயாரிக்க வேண்டும் நன்றி. படத்தில் பணி புரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.” என்றார்.
ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் விவேக் பேசுகையில், “தயாரிப்பாளர் பாபி அண்ணனை, எனக்கு நன்றாகத் தெரியம். நானும் அவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி, இந்தப் படத்தின் மூலம் அவருக்கு கிடைக்கும். அருண் விஜய் எனக்கு அண்ணன் தான், அவர் தன்னால் முடிந்த முழு உழைப்பையும் இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த டிரெய்லர் கண்டிப்பாக அனைவரையும் கவர்ந்திருக்குமென நம்புகிறேன், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

நடிகை சித்தி இத்னானி பேசுகையில், “என்னுடைய முதல் படத்திற்கு பிறகு நான் கொஞ்சம் ரிலாக்ஸாக மாறி விட்டேன் என்று நினைக்கிறேன். அந்த எண்ணத்தை இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விட்டு விட்டேன். இனிமேல் தேடலுடன் பணியாற்ற போகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம். அதுவே என்னை இங்கு நிறுத்தியுள்ளது. கண்டிப்பாக அது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் திரு சாருக்கு நன்றி. அருண் விஜய் சாருக்கும் நன்றி. அவருடன் பணி புரிந்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் பணி புரிந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் பணி புரிந்தோம். நானும் தமிழ் கற்றுக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன். இந்த படம் அனைவருக்கும் ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.” என்றார்.
படத்தின் எடிட்டர் ஆண்டனி பேசுகையில், “இந்தப் படத்தில் திருவுடன் இணைந்து பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு எடிட்டிங்கில் மிகவும் உதவியாக இருந்த என்னுடைய உதவியாளர் வெரோனிகாவிற்கு நன்றி. இந்தப் படத்தில் முழுக்க முழுக்க எடிட்டிங்கில் பணி புரிந்துள்ளார், அவருக்கும் நீங்கள் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி.” என்றார்.
இயக்குநர் கிரிஷ் திருகுமரன் பேசுகையில், “விழாவிற்கு வந்த இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி, இந்தப்படத்தில் என்னுடன் பணி புரிந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பாபி சாருக்கும், அருண் விஜய் சாருக்கும் நன்றி. படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்கவும் இந்தப் படம் ஒரு நல்ல திரை அனுபவத்தை அனைவருக்கும் கொடுக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசுகையில், “திரு சார் அதிகம் பேசுவார் என்று நினைத்தேன், ஆனால் படம் பேசும் என்று சுருக்கமாக பேசியுள்ளார். இந்தப் படத்தின் கதை என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் எனக்கு சவாலாக இருந்தது. அப்போதே நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். இந்தப் படத்தின் முக்கிய தூணாக இருந்தது எடிட்டர் ஆண்டனி சார். படம் படு வேகமாக இருந்தது, அதை சரியாக கட் செய்து கொடுத்துள்ளார். படத்தில் பாடல்களும் காட்சிகளும் உயர்ந்த தரத்தில் இருக்கும். நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்குமென நம்புகிறேன். இந்தப் படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது நன்றாகவே வந்துள்ளது. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும். தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்படத்திற்காக அனைவரும் பெரும் உழைப்பு கொடுத்துள்ளோம், கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.” என்றார்.
நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

