’ஆழி’ திரைப்பட விமர்சனம்
Casting : R.Sarathkumar, Indrajith Jagajith, Devika Satheesh, Vaiyapuri, Sreejith Revi, Birla Bose, Thamaraiselvi, Sarjin, Mythili Sathyaraj, Binish Babu, Biju Mavunkal Varghese, Teena Bhatia
Directed By : Madhav Ramadasan
Music By : Songs - Jassie Gift, Back Ground Score - William Francis
Produced By : 888 Production & Celluloid Creaations
மீன்பிடி படகு மெக்கானிக்கான சரத்குமார், அந்த வேலையை பகுதி நேரமாக வைத்துக் கொண்டு, போதைப் பொருள் விற்பனை, ஆயுதம் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, கல்லூரியில் படிக்கும் அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், உடன் படிக்கும் மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஜெகஜித் மற்றும் தேவிகாவின் காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரிய வருகிறது. கோபம் கொள்ளும் அவர் இந்திரஜித் ஜெகஜித்தை கடத்தி ஆழ்கடல்லுக்கு அழைத்துச் சென்று விடுகிறார். ஆழ்கடலில் வைத்து கொலை செய்ய திட்டமிடும் சரத்குமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திரஜித் ஜெகஜித், தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ஆழ்கடலில் பயணப்படும் மீன்பிடி படகு ஒன்றில் கதை நடப்பதால் படத்திற்கு ‘ஆழி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஒரு மீன்பிடி படகு, அதில் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான மனம் மற்றும் உடல் ரீதியான போராட்டங்களை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தை இயக்குநர் மாதவ் ராமதாசன் கடத்தியிருக்கிறார்.
அப்பா வேடம் சரத்குமாருக்கு புதிதல்ல என்றாலும், அதில் முடிந்தவரை புதுமையை வெளிக்காட்ட முயற்சித்திருக்கிறார். வழக்கமான பாசக்கார அப்பா ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் கொடூரமான வில்லன், என்று சரத்குமார் ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்தின் சாயல் இருப்பதால், அதிக தலைமுடி, ஒட்டு தாடி என்று தோற்றத்தில் வேறுபாட்டை காட்டியிருந்தாலும், அது பெரிதாக எடுபடவில்லை. இருந்தாலும், வாங்கிய சம்பளத்திற்கு தனது வேலையை சரியாகவே செய்திருக்கிறார்.
இளம் நாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித், வித்தியாசமான தோற்றத்தில், கதாபாத்திரத்தோடு ஒட்டாமல் நடித்திருக்கிறார். மரண பயத்தை காட்டிய காதலியின் தந்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு அவரது நடிப்பில் இல்லை.
சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ், இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார். அவருக்கான வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்து பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்.
வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரை செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா ஆகியோர் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டியிருக்கிறார்களே தவிர திரைக்கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆழ்கடலில் பயணிக்கும் மீன்பிடி படகில் நடந்தாலும், அதில் வரும் முக்கியமான காட்சிகள் மினிநேச்சர் முறையில் படமாக்கப்பட்டிருப்பதால் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என்.நாயர், அதிகம் மெனக்கெடவில்லை. படகின் உட்புறத்தில் நடக்கும் சண்டைக்காட்சி மற்றும் படகின் இன்ஜின் அறை என குறுகிய இடத்தில் காட்சிகளை படமாக்கியது சற்று கவனம் ஈர்க்கிறது.
ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் சுமார் ரகம். வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும் அதே ரகம் தான்.
ரசூல் பூங்குட்டியின் ஒலி வடிவமைப்பில் தனித்துவம் ஏதும் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் படத்தில் அதிகம் இல்லை. ஆழ்கடலின் ஓசை, மீன்பிடி படகின் பயண ஓசை மற்றும் அதனுள் நிகழும் மாற்றங்கள் ஆகியவற்றின் ஒலியை கச்சிதமாக கொடுத்திருந்தாலும், அவை எதுவும் பார்வையாளர்களை பாதிக்கவில்லை.
ஒரு குறிப்பிட்ட இடத்தில், இரு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் கதை என்றாலும், அதை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் வகையில் படத்தொகுப்பாளர் கே.ஸ்ரீநிவாஸ் காட்சிகளை தொகுத்திருந்தாலும், அழுத்தம் இல்லாத திரைக்கதையால் அவரது பணியும் படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.
எழுதி இயக்கியிருக்கும் மாதவ் ராமதாசன், ஆழகடலில், உயிருக்கு போராடும் இருவரது பயணத்தை பரபரப்பாக சொல்ல முயற்சித்திருந்தாலும், அவர்கள் கடலுக்கு செல்வது மற்றும் அங்கு சிக்கிக் கொள்வது ஆகியவற்றின் காரணங்களும், சூழல்களும் அழுத்தமாக இல்லாதது படத்தை பலவீனப்படுத்தி விடுகிறது.
போதைப் பொருள், ஆயுதம் கடத்தல் என்று சரத்குமாரை ஜகஜால வில்லனாக சித்தரித்துவிட்டு, எந்த வேலையாக இருந்தாலும் அவர் தனியாக செய்வது போல் காட்சிப்படுத்தியிருப்பது எல்லாம் மிகப்பெரிய லாஜிக் ஓட்டை.
முதல் பாதியில் உயிர் தப்பிக்க போராடும் நாயகன், இரண்டாம் பாதியில் ஓரளவு மட்டுமே காயம் அடைந்த வில்லனை காப்பாற்ற போராடுவதும், அதனால் ஏற்படும் சம்பவங்களை திருப்பங்களாக வைத்து கதையை நகர்த்தியிருப்பது என எந்த ஒரு விசயமும் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை.
படம் முழுவதும் பல குறைகள் இருந்தாலும், இறுதிக் காட்சியில் சரத்குமார் உடலில் வழியும் இரத்தம் மூலம் நாயகன், தனது பெயரையும், காதலி பெயரையும் எழுதி தன் காதலின் தீவிரத்தை நிரூபிக்க, அதற்கு பதிலடியாக சரத்குமார், தன் நெஞ்சில் பச்சைக் குத்தியிருக்கும் மகள் பெயரை காட்டும் காட்சி, திடீரென்று மலர்ந்த காதலை காட்டிலும், தந்தை - மகள் இடையே இருக்கும் அன்பும், உறவும் பெரியது என்பதை வெளிக்காட்டும் அந்த ஒரு காட்சி மட்டுமே புதிதாகவும், ரசிக்கும்படியும் உள்ளது.
மொத்தத்தில், ‘ஆழி’ என்ற தலைப்பில் இருக்கும் ஆழம் திரைக்கதையில் இல்லை.
ரேட்டிங் 2.5/3

