Oct 09, 2021 08:06 PM

புளூ சட்டை மாறனுக்கு அஞ்சலி! - அலறவிட்ட முன்னணி இயக்குநர்

புளூ சட்டை மாறனுக்கு அஞ்சலி! - அலறவிட்ட முன்னணி இயக்குநர்

வெள்ளிக்கிழமையன்று என்ன புதுப்படம் வெளியாகிறது, என்ற எதிர்ப்பார்ப்பை விட, அப்படங்களை புளூ சட்டை மாறன் எப்படி விமர்சனம் செய்யப்போகிறார், என்ற எதிர்ப்பார்ப்பு தான் தற்போது அதிகரித்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடினாலும், மறுபக்கம் புளூ சட்டை மாறனை காவு கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள் சில கோலிவுட் ஆசாமிகள்.

 

அவர்களுடைய அத்தகைய எண்ணத்திற்கு தீனி போடும் விதத்தில், புளூ சட்டை மாறனும் தற்போது ஒரு திரைப்படம் இயக்கியிருக்கிறார் என்பதும், அப்படம் பல சிக்கல்களை கடந்து தற்போது தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டது என்பதும் அனைவரும் அறிந்தது தான்.

 

’ஆன்டி இன்டியன்’ என்ற அப்படம் எப்போது வெளியாகும், என்று ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அந்த டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் பெரும் சர்ச்சையை கிளப்பும் வகையில், புளூ சட்டை மாறன், நிகழ்ச்சி நடந்த பிரசாத் லேபில், தனது புகப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்ததோடு, அந்த போஸ்டருக்கு அவரே மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார்.

 

அவருடைய இத்தகைய நடவடிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவிக் கொண்டிருக்க, நிகழ்ச்சியில் அவர் பேசும் போது கூறிய தகவலால் ஒட்டு மொத்த கோலிவுட்டே பெரும் பரபரப்படைந்துள்ளது.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் புளூ சட்டை மாறன், “படம் முடிந்தவுடன் ஒருமுறை இயக்குநர் பாரதிராஜாவை சென்று சந்தித்தபோது, “டே சாட்டை.. உன் படம் முடிஞ்சிருச்சுன்னு கேள்விப்பட்டேன்.. உன் படத்தை போடு.. நான் ஒரு புளூ சட்டையை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பாரு” என்றார்.

 வருடத்திற்கு வெளியாகும் நூறு படங்களில் பத்து படங்கள் தான் நல்ல படங்களாக இருக்கின்றன. இந்த கொரோனா காலகட்டத்தால் கிட்டத்தட்ட இருநூறு படங்கள் தேங்கி கிடக்கின்றன. அவையெல்லாம் இனி தான் வரப்போகின்றன. எல்லா படத்தையும் உடம்பை இரும்பாக்கிக் கொண்டுதான் பார்க்க வேண்டும். ஆனால் நிச்சயம் ’ஆன்டி இண்டியன்’ உங்கள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் பாரதிராஜா தன் மனதில் இருந்ததை நேரடியாக சொல்லிவிட்டார். ஆனால், கோலிவுட்டில் இருக்கும் பல இயக்குநர்கள் அதை சொல்லாமல் செய்யப் போகிறார்கள், என்பதால் புளூ சட்டை மாறனின் ’ஆன்டி இண்டியன்’படம் வெளியானல், படத்தை பார்ப்பவர்களை விட, அப்படத்தின் விமர்சனங்களை பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள் போலிருக்கே.