Sep 24, 2021 03:33 AM

தணிக்கை அதிகாரிகளை மிரள வைத்த ‘ரூபாய் 2000’

தணிக்கை அதிகாரிகளை மிரள வைத்த ‘ரூபாய் 2000’

புதுமுகங்களின் புதிய முயற்சியில் உருவாகும் பல படங்கள் மக்களிடமும், சமூகத்திலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படமாக உருவாகியிருக்கும் ‘ரூபாய் 2000’ வெளியான பிறகு தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆரம்பமாக சமீபத்தில் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினரையே படத்தின் காட்சிகள் மிரளச் செய்திருக்கிறது.

 

பீனிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோ.பச்சியப்பன் தயாரித்திருக்கும் ’ரூபாய் 2000’ படத்தை ருத்ரன் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் தணிக்கை சமீபத்தில் நடந்தது. படம் பார்த்த தணிக்கை குழுவினர் 105 கட்டுகள் கொடுத்தார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் ரிவைஷ் கமிட்டிக்கு போக, காட்சிகளுக்கான காரணங்களை ஆவணமாக கொடுத்து மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு 24 கட்டுகளுடன் படத்தை வெளியிட அனுமதிப் பெற்றார்கள். 

 

ஏவிஎம்-மின் 'அந்த நாள்' படத்திற்கு பிறகு பாடல்களே இல்லாமல் வெளிவரும் படம் என்ற சிறப்பை பெற்றிருக்கும் 'ரூபாய் 2000'. ஏ.வி.எம் நிறுவனத்தின் ‘பராசக்தி’, ‘வேலைக்காரி’, ‘விதி’ படங்களுக்குப் பிறகு சமூக சிந்தனையோடுக்கூடிய வழக்காடுமன்றக் காட்சிகள் இந்தப் படத்தில் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது. நிஜமான சமூக ஆர்வலர்கள் சமூகப் போராளிகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

அதிகார அத்துமீறலுக்கு எதிரான ஒரு ஏழை விவசாயின் சட்டப்போராட்டம் தான் இந்தப் படத்தின் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. சொந்த சாதியின் மீதான பற்றினைத் துறப்பதே சாதி ஒழிப்புக்கான முதல் படியாகும், போன்ற கருத்துகளை உள்ளடக்கிய படமாகவும் இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

 

இதில்  பாரதி கிருஷணகுமார், ருத்ரன் பராசு, ஷர்னிகா, அய்யநாதன், தோழர் தியாகு, தோழர் திருமதி ஓவியா, பரியேறும் பெருமாள் கராத்தே வெங்கடேஷ், ’பிசைக்காரன்’ மூர்த்தி, பிர்லா போஸ், கவண் பிரியதர்ஷினி, ரஞ்சன், கற்பகவல்லி, தர்ஷன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

பிரிமூஸ் தாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இனியவன் இசையமைத்திருக்கிறார். லட்சுமணன் படத்தொகுப்பு செய்ய, ராஜ்குமார் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.