Apr 22, 2018 08:16 AM

ஆக்‌ஷன் ஹீரோவான சேரன்!

ஆக்‌ஷன் ஹீரோவான சேரன்!

குடும்ப கதைகளில் ஹீரோவாக நடித்து வந்த இயக்குநர் சேரன், ’ராஜாவுக்கு செக்’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். இதில் சேரனுக்கு ஜோடியாக நந்தனா வர்மா நடிக்க, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்பான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

மலையாள சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் ஆகியோர் பல்லாட் கொக்கட் பிலிம் ஹவுஸ் சார்பில் தயாரிக்கிறார்கள்.

 

இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் நம்மிடையே பேசுகையில், “மலையால திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதால் தமிழ் சினிமாவில் படம் எடுக்க காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.

 

ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் சேரனை மிகவும் வியந்து பார்க்கிறோம். சினிமாவை அதிகம்  பார்க்கும் நடுத்தர குடும்ப மக்களிடம் சேரன் சார் மிக சிறப்பாக சென்று சேர்ந்துள்ளார். எங்கள் இயக்குநர் ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘மழை’ படத்தையும், தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில்ராஜு மற்றும் பூரி ஜெகநாத் தயாரிப்பில் ‘ஹலோ ப்ரேமிஸ்தாரா’ படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படங்களை ராஜ்குமார் என்ற பெயரில் இயக்கியவர் தற்போது சாய் ராஜ்குமார் என்று தன் பெயரை மாற்றியிருக்கிறார். அவரின் படங்களை பார்த்து, அவர் திறமை மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

 

‘ராஜாவுக்கு செக்’ என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும் திரைக்கதையோடு சரியான புள்ளியில் இணையும். சேரன் சார் குடும்ப கதைகளில் நடித்தவர். சாய் ராஜ்குமார் தமிழில் ஆக்‌ஷன், தெலுங்கில் திரில்லர் படத்தையும் இயக்கியவர். இவர்கள் இருவரும் இணைவதே ஆச்சர்யத்தை உருவாக்கும். சேரன் சாரை இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள். ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமையும். படப்பிடிப்பை மீண்டும் துவக்கியிருக்கிறோம், கூடிய விரைவில் மொத்த படமும் முடிந்து விடும்.” என்றார்.

 

எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வினோத் யஜமான்யா இசையமைக்கிறார். பி.ராஜு கலையை நிர்மாணிக்க, சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பு செய்கிறார். டேஞ்சர் மணி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜெயந்தா பாடல்கள் எழுதுகிறார்.