Sep 29, 2019 09:21 AM

”பல வருட கனவு நனவானது” - மகிழ்ச்சியில் சிரஞ்சீவி

”பல வருட கனவு நனவானது” - மகிழ்ச்சியில் சிரஞ்சீவி

150 படங்களில் நடித்திருக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாகியுள்ள முதல் வரலாற்று படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

 

இதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் சிரஞ்சீவி, “நடிகனாக நான் பிறந்த சென்னைக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. R B சௌத்திரி படத்தை வாங்கியதற்கு அவருக்கு மிகப்பெரிய நன்றி. ’சைரா நரசிம்மா ரெட்டி’ எனது நெடு நாள் கனவு. பல காலமாகவே பட்ஜெட் பெரிதாக இருந்ததால் உருவாக்க முடியாத கனவாக இருந்தது. நான் சிறு இடைவேளைக்கு பின்  சினிமா வந்த பிறகு தமிழில் வந்த ‘கத்தி’ படத்தை ரீமேக் செய்து நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏன் இப்போது சைரா செய்யக் கூடாது என நினைத்தேன். பாகுபலியின் வெற்றி நிறைய நம்பிக்கை தந்தது. 

 

ஏன் இந்தப்படத்தை நாம தயாரிக்கக் கூடாது என ராம்சரணைக் கேட்டேன். அவர் அவருடைய இரண்டாவது படத்திலேயே வரலாற்று கதை காஸ்ட்யூம் போட்டு நடித்து விட்டார். நான் 150 படம் நடித்தும் வரலாற்று கதையில் நடிக்கவில்லை. இந்தப்படம் அந்தக் கனவை நனவாக்கி தந்துள்ளது. தமிழில் கேட்டுக்கொண்டவுடனே கமல் குரல் தந்துள்ளார். அரவிவிந்த் சாமி டப்பிங் பேசியுள்ளார். இருவரின் அன்பிற்கும் நன்றி. இது ஒரு மொழிக்கான படமில்லை. வரலாற்றில் மறக்கப்பட்ட வீரனின் கதை. அனைத்து  மொழிக்குமான படம், இந்தியப்படம். இப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் படத்திற்கு வேண்டும். வாழ்த்துங்கள்” என்றார்.

 

சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தின் கதையை பருச்சூரி சகோதரர்கள் எழுதியுள்ளனர். நடிகர் ராம் சரண் தனது கொனிடெல்லா புரொடக்‌ஷன்ஸ் (Konidela Production) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார். அமித் திரிவேதி இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜீவன் கலையை நிர்மாணித்துள்ளார். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி வெளியிடுகிறார்.