Sep 24, 2021 06:30 AM

சினிமாவில் உண்மைக்கு மரியாதை இல்லை - ’ருத்ர தாண்டவம்’ மேடையில் ராதாரவி வருத்தம்

சினிமாவில் உண்மைக்கு மரியாதை இல்லை - ’ருத்ர தாண்டவம்’ மேடையில் ராதாரவி வருத்தம்

ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் இயக்குநர் மோகன்.ஜி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் ரிச்சர்ட்டுக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கெளதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்திருக்கிறார்.

 

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குளில் இப்படத்தை வெளியிட பிரபல விநியோகஸ்தர் 7ஜி சிவா திட்டமிட்டுள்ளார்.

 

‘திரெளபதி’ வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மோகன்.ஜி நடிகர் ரிச்சர்ட் கூட்டணியில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் ‘ருத்ர தாண்டவம்’. சர்ச்சைகளாலும், விவாதங்களாலும் வெற்றி பெற்ற ‘திரெளதி’ படத்தைப் போலவே ‘ருத்ர தாண்டவம்’ படத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும் முயற்சியில் படக்குழுவினர் இறங்கி விட்டார்கள், என்பது சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

 

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, “என்னை சுற்றி இருப்பவர்களின் கதைகளை தான் படமாக எடுத்து வருகிறேன். ’திரெளபதி’ படமும் நான் அறிந்த சம்பவம் தான். அதுபோல தான் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் கதையும். கிறிஸ்தவ பாதரியராக இருக்கும் என் நண்பர் சொன்னவைகளை வைத்து தான் இந்த படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறார். கிறிஸ்தவ மதம் தற்போது கார்ப்பரேட் நிறுவனமாக மாறி வருகிறது, என்று கூறிய என் நண்பர் அது குறித்து விரிவாக என்னிடம் பேசினார். இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக உருவாகும் என விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என சொன்னார்.

 

சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்து விடுவோம். வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதி திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார். இவையெல்லாம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. மக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. நம்முடன் இருந்து கொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை பாதிரியாருடைய கண்ணோட்டத்திலிருந்து சொல்லும் பொழுது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதை கேட்டவுடன் இதுதான் என்னுடைய அடுத்த படைப்பு என்று உறுதி எடுத்துக் கொண்டு ’ருத்ர தாண்டவம்’ என தலைப்பு வைத்து பணிகளைத் தொடங்கிவிட்டேன்.

 

இந்தப் படம் யார் மனதையும் காயப் படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை. ஒரு படைப்பாளியாக எனக்கு கிடைத்த ஒரு நல்ல கருவை அனைவரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன்.” என்றார்.

 

Ruthra Thandavam

 

நடிகர் ராதாரவி பேசுகையில், “இயக்குநர் மோகன்.ஜி இந்த கதையை என்னிடம் சொன்ன போது, ஒரு வசனத்தை பேச அனுமதித்தால் நடிப்பேன், என்றேன். அவர் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் நடித்தேன். நான் சம்பளமாக கேட்ட தொகையால அவர் அதிர்ச்சியடைந்து விட்டு, திரும்ப வரவே இல்லை. பிறகு அவர் நிர்ணயித்த சம்பளத்திற்கு நான் சம்மதம் சொன்னேன். 

 

இந்த படத்தை யார் மனதையும் புன்படுத்தும் நோக்கத்தில் அவர் எடுக்கவில்லை. எது நியாயமோ அதை சொல்லியிருக்கிறார். இவர் தான் என் தலைவர் என்று ஒருவரை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும், அவருக்காகவே இந்த படத்தை எடுத்தது போல் இருக்கும். நான் வணங்கும் தலைவர்களில் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர். அவர் இந்தியாவிற்கான அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். அவர் ஒரு ஜாதிக்காக இதனை செய்யவில்லை. இதை சொல்வது தான் ருத்ர தாண்டவம் படம்.

 

நான் ஒரு திறமையான நடிகன், இதனை சொல்லி சொல்லிஓய்ந்து விட்டேன். இனிமேல் சொல்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஏனெனில் திரை உலகில் காகித பூக்களுக்கு தான் மரியாதை. உண்மையான வாசம் வீசும் மலருக்கு மரியாதை கிடைப்பதில்லை.” என்றார்.