Mar 09, 2020 02:32 PM

சினிமா தயாரிப்பாளரின் கடமை மிகப்பெரியது - ‘வால்டர்’ தயாரிப்பாளர் பிரபு திலக்

சினிமா தயாரிப்பாளரின் கடமை மிகப்பெரியது - ‘வால்டர்’ தயாரிப்பாளர் பிரபு திலக்

புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வால்டர்’. 11:11 புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஸ்ருதி திலக் தயாரிக்கும் இப்படத்திற்கு, டாக்டர். பிரபு திலக் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.  திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் நட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் மார்ச் 13 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பிரபு திலக் பேசுகையில், “இங்கு நான் நிறைய பேச நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளரின் கடமை சினிமாவில் மிகப்பெரிது. மிக முக்கியமானது. கதை கேட்பதில் ஆரம்பித்து அது உருவாகி அதனை கொண்டு சேர்ப்பது வரை, அது பெரும் கடமை. ஒரு சினிமாவால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும். சினிமாவில் சமூகத்திற்காக ஏதாவது நல்லதை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் அந்த காலத்திலேயே பெரும் புரட்சி ஏற்படுத்தும் படங்கள் வந்திருக்கிறது. சமூகத்தை பாதிக்ககூடிய அல்லது சமூகத்திற்கான தேவையை கொண்டு போய் சேர்ப்பது தான் சினிமாவின் வேலை. இரண்டு சமூக மக்கள் எங்கோ சண்டை போட்டுக் கொண்டதை சினிமாவாக்கி சம்பாதிப்பது சினிமாவின் வேலையல்ல. ஒரு சிறு  திரைக்காட்சி கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு மிகப்பெரும் ஆயுதம் இந்த சினிமா. அப்படி பட்ட சினிமாவில் வேலை செய்யும் வாய்ப்பு தந்த என் அம்மாவிற்கும் மற்ற அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். ஒரு கோவிலின் கர்பகிரகத்தில் கிடைக்கும் அமைதி எனக்கு சினிமாவில் கிடைக்கிறது. எனது டீமுடன் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என் குடும்பமாக அவர்கள் என்றென்றும் என்னுடன் இருப்பார்கள். “வால்டர்” ஒரு கமர்ஷியல் படம் அதிலும் சமூகத்திற்கு தேவையான ஒரு விசயத்தை பற்றி பேசியுள்ளோம். நம் அடுத்த தலைமுறையை குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இன்று படம் உங்கள் முன் வந்துள்ளது. நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் பேசுகையில், “இந்தப்படத்தை பற்றி நிறைய பேசலாம். முன்பே இசை விழாவில் இப்படம் குறித்து பேசியுள்ளோம். படத்தில் முக்கியமான சமூககருத்தை பற்றி கூறியிருக்கிறோம்.  நீங்கள் அனைவரும் மக்களுக்கு அதனை எடுத்து செல்ல வேண்டும். படம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

Walter Press Meet

 

நடிகர் சிபிராஜ் பேசுகையில், “சினிமாவில் ஒரு நல்ல படம் அதற்கு தேவையானதை அதுவே தேடிக்கொள்ளும் என்பார்கள் அது எப்படி என்று யோசிப்பேன். ஆனால் இந்தப்படத்தில் அது நடந்தது. ஐந்து வருடமாக உழைத்து, இந்தப்படத்தை பல தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்று, பெரும் கஷ்டங்களுக்கு பிறகு இப்போது இயக்கியுள்ளார் அன்பு. இறுதியில் இப்படம் ஒரு நல்ல பொறுப்பான தயாரிப்பாளரிடம் வந்து சேர்ந்துள்ளது. இப்படத்தில் நட்டி நடிக்கிறார் எனும்போதே எனக்கு பயமாக இருந்தது. அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. அப்பாவுடனும் வடிவேல் சாருடனும் நடிக்கும் போது பயமாக இருக்கும். எப்படி இவர்கள் முன் நடிப்பது என்று. அதே மாதிரி தான் நட்டி சார் முன் நடிக்க பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக ஆதரவாக இருந்தார். இந்தப்படம் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து இப்போது ஒரு நல்ல நிலையை  வந்தடைந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் சாட்டிலைட் விற்றுவிட்டது.  படத்தின் மீதும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகர் நட்ராஜ் சுப்பிரமணியம் பேசுகையில், “’வால்டர்’ மிகச்சிறப்பான திரைக்கதை கொண்ட படம். இயக்குநர் கதை சொன்னபோதே  எனக்கு ரொம்ப பிடித்தது. சொன்ன மாதிரியே எடுத்துள்ளார். இந்தப்படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். சிபிராஜ்ஜுடன் நடித்தது சந்தோஷம். அவர் நடித்தபோது அவர் அப்பாவை பார்ப்பது போலவே  இருந்தது. சமுத்திரகனி என் நெருங்கிய நண்பர். அவருடன் வேலை பார்த்ததும் சந்தோஷம். தயாரிப்பாளர் குடும்பமே காவல்துறை சம்பந்தப்பட்டது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இந்தப்படத்தை தயாரித்துள்ளார்கள். இந்தப்படம் எல்லோரையும் கவரும் படைப்பாக இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் யு.அன்பு பேசுகையில், “வால்டர் சிபிராஜ் சாரிடம் இரண்டு கதை சொன்னேன் அவர் இதை தேர்ந்தெடுத்தார். அந்த நாள் முதல் இப்போது வரை இந்தப்படத்தில் தான் பயணம் செய்திருக்கிறேன். இந்தப் படம் அதற்கு தேவையானதை எடுத்து கொண்டு அதுவாகவே  முழுமை பெற்றிருக்கிறது. படம் நல்லபடியாக வந்துவிட்டது இனி எல்லாம் உங்கள் கைகளில்.  நீங்கள் தான் ஒரு படத்தை வெற்றிப்படமாக மாற்றக்கூடியவர்கள். ஒரு படத்தை   நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் இந்தப்படத்தை நீங்கள் ரசிப்பீர்கள். இந்தப்படம் முழுமையாக உருவாகி நிற்க தயாரிப்பாளர் தான் காரணம் அவருக்கு நன்றி. சிபிராஜ் சார் என்னை முழுமையாக நம்பினார் அவருக்கு நன்றி. நட்டி அண்ணன் பெரும் ஆதரவாக இருந்தார். படக்குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்’என்றார்.

 

’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஷ்ரின் கான்ஞ்வாலா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க, ரித்விகா, யாமினி, அபிஷேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். எஸ்.இளையராஜா படத்தொகுப்பு செய்துள்ளார். ஏ.ஆர்.மோகன் கலையை நிர்மாணித்துள்ளார்.