நடிகர் சங்க தேர்தல் பணியில் கல்லூரி மாணவர்கள்! - ஐசரி கணேஷ் மீது பரபரப்பு புகார்

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஜுன் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற நாசர், விஷால், கார்த்தி ஆகியோரது தலைமையிலான பாண்டவர் அணி, இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறது. இந்த அணியை எதிர்த்து பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோர் தலைமையிலான அணி போட்டியிடுகிறது.
வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் உரிமையாளரான ஐசரி கணேஷ், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு, திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். கடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால், அணிக்கு ஆதரவாக செயல்பட்ட இவர், தற்போது விஷால் அணிக்கு எதிராக அணி ஒன்றை உருவாக்கியதோடு, தானே நேரடியாக தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், ஐசரி கணேஷ், தனது கல்லூரி மாணவர்களை, நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக, விஷால் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் பூச்சி முருகன் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐசரி கணேஷ் நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்தில் மாணவர்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களுடன், மாநில உயர்கல்வி அதிகாரிகளுக்கு புகார் அனுப்ப விஷால் அணி முடிவு செய்துள்ளது.