அமேசானில் இருக்கும் ஆபத்து! - தயாரிப்பாளர்களை எச்சரிக்கும் இளம் இயக்குநர்

நடிகர் சூர்யாவின் 2டி டெண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல், OTT தளமான அமேசானில் நேரடியாக ரிலீஸ் செய்யும் விவகாரம் தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.
சூர்யாவின் இந்த முயற்சிக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். திரையரங்கங்கள் கிடைக்காமல் கஷ்ட்டப்படுக் பல சிறு முதலீட்டு படங்களுக்கு இந்த ஒ.டி.டி தளம் வரப்பிரசாதம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், திரைப்படங்களை விலைக்கு வாங்கும் ஒ.டி.டி தளத்தில் இருக்கும் ஆபத்துகள், பற்றி இளம் இயக்குநர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக அமேசானில் அவரது படத்தை விற்பனை செய்ததன் மூலம் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் அவர் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
’கோகோ மாக்கோ’ மற்றும் ‘இந்த நிலை மாறும்’ ஆகிய படங்களை இயக்கியிருப்பவர் அருண்காந்த். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் நேரடியாக படம் இயக்க தொடங்கிய இந்த இளம் இயக்குநர் அமேசா நிறுவனத்திடம் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி கூறுகையில், “அமேசான் நிறுவனத்தில் படங்களை விற்பனை செய்யும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களிடம் ரெவென்யூ ஷேர் என்ற அடிப்படையில் படத்தை விற்பனை செய்யாதீர்கள். அவுட் ரேட் என்ற முறையில் விற்பனை செய்வதே உங்களுக்கு பலன் தரும்.
ரெவென்யூ ஷேர் என்ற அடிப்படையில் படத்தை வாங்கும் அமேசான், அப்படங்களை ரசிகர்கள் ஒரு மணி நேரம் பார்த்தால், ரூ.2.50 முதல் 3 ரூபாய் வரை தான் கொடுப்பார்கள். அதேபோல், அமேசானில் அந்த படம் இருக்கிறது, என்பதையும் அவர்கள் விளம்பரம் செய்ய மாட்டார்கள். அவுட் ரேட் என்ற அடிப்படையில் வாங்கப்படும் படத்தை தான் அமேசான் விளம்பரம் செய்கிறது.
எனது படங்களை நான் ரெவென்யூ ஷேர் என்ற அடிப்படையில் அமேசான் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததால் ஏற்பட்ட அனுபவத்தை வைத்தே இதை இங்கே பதிவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.