இயக்குநர் ஷங்கர் படம் டிராப்! - தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை

இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினாலும், படப்பிடிப்பு மட்டும் தொடங்கவில்லை. தயாரிப்பாளர் தரப்பு ஷங்கருக்கு போட்ட கிடுக்கு பிடியால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், லைகா நிறுவனமே படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு ஹீரோவாக நடிக்கும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், வடிவேலுக்கும், சிம்புதேவனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் படப்பிடிப்பு நின்றது.
இதையடுத்து வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் அளிக்க, அவர்கள் இழப்பீடாக ரூ.10 கோடி தர வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, அப்படி இழப்பீடு தராத பட்சத்தில், வடிவேலு எந்த படத்திலும் நடிக்க கூடாது, என்று தடை விதித்தது. இதனால், சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த இழப்பீடு பணமாக அல்லாமல் சம்பளம் வாங்காமல் ஷங்கருக்கு இரண்டு படங்கள் நடித்துக் கொடுப்பதாக வடிவேலு கூறியிருக்கிறாராம். இதனால், அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், சிம்புதேவன் இயக்கத்தில், ஷங்கர் தயாரிக்க இருந்த ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் டிராப்பாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.