”முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்” - விஷாலை விமர்சித்த அருண்பாண்டியன்
சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘தெளலத்’. எம்.பி.முகம்மது அலி தயாரித்திருக்கும் இப்படம் தரமான படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் சக்தி சிவனுக்கு ஜோடியாக ஜான்வி நடித்திருக்கிறார்.
படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசுகையில், “பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டும் பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும். இந்தப் படத்தின் தலைப்பு தெளலத். தெளலத் என்றால் உருது மொழியில் செல்வம் என்று பொருள். இந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்காமல் படத்தைப் பற்றிப் பேசக்கூடாது. ஆனால் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நடிகர் ஜீவா நடிகர் சங்கத்தைப் பற்றி மறைமுகமாக சொன்னார். நான் நேரடியாகவேச் சொல்கிறேன். விஷாலைப் பற்றி எனக்கு இப்போது தான் தெரியும். அயோக்யா படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர். அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்தேன். முதலில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பின் பதவிக்கு வரவேண்டும். இங்கு தயாரிப்பாளரைப் பிடிப்பது முக்கியமல்ல. தயாரிப்பாளரைக் காப்பாற்ற வேண்டியது தான் முக்கியம்.” என்றார்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட பலரும் படத்தையும் படக்குழுவினரையும் வாழ்த்திப் பேசினார்கள்.