Oct 04, 2025 05:21 PM

நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் 'ட்யூட்'- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் 'ட்யூட்'- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

‘லவ் டுடே’ மற்றும் ‘ட்ராகன்’ என இரண்டு பெரிய வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் பரபரப்பான நாயகனாக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் மூன்றாவது திரைப்படமாக ‘ட்யூட்’ வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

 

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்திருக்கும் இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தில் பாடல் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படம் பற்றிய தகவல்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. 

 

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், கல்லூரி படிப்பை முடித்த உடன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக இணைந்து சுமார்  7 வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 27 வயதில் தன்னுடைய முதல் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், ’ட்யூட்’ பட அனுபவம் குறித்து கூறுகையில், “என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் 'ட்யூட்' படத்தின் கதை சொன்னேன். அவர்களுக்கும் கதை உடனே பிடித்து போனதால்  பட வேலைகள் தொடங்கினோம். 'ட்யூட்' படத்தின் கதை எழுதத் தொடங்கியபோது ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துதான் எழுதினேன். அதில் பிரதீப் ரங்கநாதன் பொருந்திப் போயிருக்கிறார். பிரதீப்புக்கும் கதை பிடித்ததால் ஒத்துக் கொண்டார். 

 

படத்தில் பிரதீப்- மமிதா இருவரும் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்துவார்கள். முழுக்க முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். 

 

லவ் சப்ஜெக்ட் மட்டுமல்லாது கதையில் ஒரு மாஸ் இருக்கும். அது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். இயக்குநராக என்னுடைய முதல் படமே தீபாவளிக்கு வெளியாவது என் கனவு நனவாகியது போல உள்ளது.” என்றார். 

 

கதாநாயகியாக மமிதா பைஜூவை தேர்வு செய்தது குறித்து கேட்டபோது, ”இந்தப் படத்திற்கு மமிதாவை நான் சொன்னபோது அவரின் 'பிரேமலு' படம் கூட வெளியாகியிருக்கவில்லை. 'சூப்பர் சரண்யா' படம் பார்த்துதான் அவரை தேர்ந்தெடுத்தோம். மமிதா கதைக்குள்ளே வந்தவுடன் 'ரஜினி- ஸ்ரீதேவி' இணைந்து நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி படம் வந்திருக்கிறது எனத் தோன்றுகிறது.” என்றார். 

 

மேலும், ”காஸ்ட்யூம், லொகேஷன், விஷுவல் என எல்லாவற்றிலும் பார்த்து பார்த்து உழைத்திருக்கிறோம். என்னுடைய டெக்னிக்கல் டீம் படத்திற்கு மிகப்பெரிய பலம். புதிதாக இசையில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் சாய் அபயங்கர். அவரது இசையும் நன்றாக வந்திருக்கிறது. இயக்குநர், கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர் என அனைவரும் இளம் தலைமுறையினர் என்பதால் இது ஜென் ஸீ படமா என பலர் கேட்கின்றனர். இந்தக் காலத்து இளைஞர்களும்  குடும்ப பார்வையாளர்களும் பார்த்து கொண்டாடும் வகையில் எண்டர்டெயின்மெண்ட்டாக படம் இருக்கும். பிரத்தீப், மமிதாவுடன் நடிகர்கள் சரத்குமார், ரோகிணி, பரிதாபங்கள் புகழ் டேவிட் ஆகியோரும் நடித்துள்ளனர். 

 

பிரதீப் படத்தில் வழக்கமாக நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இதில் இருக்கும். அதே போல், அவரது முந்தைய படங்களில் இல்லாத விசயங்களும் இதில் இருக்கும். அதனால், தான் இது வெறும் காதல் படம் மட்டும் அல்ல தையும் தாண்டி பல விசயங்களைக் கொண்ட படம் என்று சொல்கிறேன்.” என்றார்.