Mar 20, 2020 08:32 AM

டிக் டாக் ஆபத்து! - பெண்களை எச்சரிக்கும் ‘ஏமாத்த போறேன்’

டிக் டாக் ஆபத்து! - பெண்களை எச்சரிக்கும் ‘ஏமாத்த போறேன்’

சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் என்றாலும், பொழுதுபோக்கையும் தாண்டி சமூகத்திற்கான, மக்களுக்கான சில பயனுள்ள விஷயங்களை சொல்லும் ஒரு மாபெரும் ஊடகம் தான் சினிமா, என்பதை சில படங்கள் நிரூபித்து வருகின்றது. அந்த வகையில், டிக் டாக் போன்ற ஸ்மார்ட்போன் ஆப்களில் வீடியோக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி, ஒரு கட்டத்தில் அதனால் தங்களது வாழ்க்கையை இழக்கும் பெண்களுக்கான எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வாகவும் உருவாகியிருக்கும் படம் தான் ‘ஏமாத்த போறேன்’.

 

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் பல விஷமிகள் குறித்து செய்திகள் வெளியானாலும், ஏமாறும் பெண்களும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம், அவர்களிடம் சமூக வலைதளம் மற்றும் ஸ்மார்போன்கள் பயன்படுத்துவது குறித்த சரியான புரிதல் இல்லாதது தான். இப்படி பல உண்மை சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்துக் கொண்டிருந்தாலும், இது பற்றி எந்த சினிமாவும் பேசாத நிலையில், இந்த பிரச்சினையை கையில் எடுத்ததோடு, இப்படிப்பட்ட குற்றங்கள் புரிபவர்களுக்கு, இப்படிப்பட்ட தண்டனை தான் கொடுக்க வேண்டும், என்பதை சொல்லியிருப்பதோடு, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து பெண்கள் தங்களை எப்படி காத்துக் கொள்ள வேண்டும், என்ற அறிவுரையையும் இப்படம் கொடுத்திருக்கிறது.

 

அறிமுக நடிகர் ஜே.பி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஜே.பி.துர்கா நடித்திருக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக வைஷாலி நடித்திருக்கிறார். இவர்களுடன் வடிவேல் டேவிட், வடிவேல் கணேஷ், ‘சுப்புரமணியபுரம்’ மாரி, பஞ்சர் பாண்டி, செல்வம், சிவா, பிரபு, பழனி, சந்துரு, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

JP and Durga in Ematha Poren

 

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜே.வாழவந்தான், பாரதிராஜா, கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். வினோத், ஜெகன், வி.லெனின் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு லியோ இசையமைக்க, மணிஷ் பின்னணி இசையமைத்திருக்கிறார். பவர் சிவா நடனம் அமைக்க, சரவணா படத்தொகுப்பு செய்திருக்கிறார். விஜய் ஜாகுவார் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, லோகு ஆடை வடிவமைப்பை மேற்கொண்டிருக்கிறார். கோவிந்தராஜ் மக்கள் தொடர்பு பணியை கவனிக்கிறார்.

 

படம் குறித்து ஹீரோ ஜே.பி கூறுகையில், ”தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சமூக வலைதளங்களின் பயன்பாடு பெருகி வரும் தற்போதைய காலக்கட்டத்தில், அதனை வைத்து பலர் மேற்கொள்ளும் மோசடிகளில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக டிக் டாக் மூலம் பெண்கள் பலர் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இளம் பெண்களும், திருமணமான பெண்களும் இந்த டிக் டாக் மோகத்தினால் தங்களது வாழ்க்கையை எப்படி இழக்கிறார்கள், என்பதை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறோம். தமிழகத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களின் தொகுப்பாக இந்த படம் இருப்பதோடு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் ஜே.வாழவந்தான் பேசுகையில், “டிக் டாக் போன்றவற்றால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை இயல்பாகவும், கமர்ஷியலாகவும் படமாக்கியிருக்கிறோம். இந்த படத்திற்காக ஹீரோ ஜே.பி டூப் இல்லாமல் சண்டைக்காட்சிகளில் நடித்தார். அவருக்கு இது முதல் படம் போலவே இருக்காது, அந்த அளவுக்கு சிறப்பாக நடித்ததோடு, கதாப்பாத்திரத்திற்காக தனது கெட்டப்பையும் மாற்றிக் காட்டியிருக்கிறார். இந்த படம் பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்ற மெசஜை சொல்வதோடு, நாட்டில் நடக்கும் இதுபோன்ற குற்றங்களை கட்டுப்படுத்தவும், இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எப்படிபட்ட தண்டனைகள் சரியாக இருக்கும், என்பதையும் சொல்லும். நிச்சயம் இப்படம் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும்.” என்றார்.

 

இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜே.பி, படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பதோடு, அந்த 5 பாடல்களையும் பார்வையற்றவரான பாடகர் சம்சூதினை பாட வைத்திருக்கிறார். பாடகர் சம்சுதீன் ஏற்கனவே சில படங்களில் பாடியிருந்தாலும், ஒரு படத்தில் அனைத்து பாடல்களையும் பாடியிருப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல், இப்படத்தின் பாடல் ஒன்றில், பெண் குரலிலும் சம்சூதின் பாடியிருக்கிறார்.

 

அன்னை சினி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜே.பி.துர்கா தயாரித்திருக்கும் ‘ஏமாத்த போறேன்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், அதை தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவிக்க உள்ளனர்.