3 வயது முதல் 80 வயது உள்ள அனைவரும் ’மிராய்’ படத்தை ரசிப்பார்கள் - நாயகன் தேஜா சஜ்ஜா நம்பிக்கை

கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘மிராய்’, பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்திருக்கிறார். மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள ‘மிராய்’ வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இபப்டத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய நாயகன் தேஜா சஜ்ஜா, “அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய்.
ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன, அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான் இப்படத்தை சிறப்பித்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்துடன் முதல் முறையாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. அர்ச்சனாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நன்றி.
மிராய், என்றால் ’எதிர்காலத்தின் நம்பிக்கை’ என்று அர்த்தம். படத்தில் இன்னொரு அர்த்தம் உள்ளது, அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும்.
மேலும், இப்படத்தை நாங்கள் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்திய படங்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ளது. இதற்கு முன் வெளியான ஹனுமான் திரைப்படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நான் தொடர்ந்து ஃபேண்டசி படங்களை நடிப்பதன் காரணம், எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. எனக்கும் ஃபேண்டசி படங்கள் பார்க்க பிடிக்கும். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் நடப்பவைகள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அது நிஜத்தில் சாத்தியமில்லாததால், சினிமாவில் அதைச் செய்ய விரும்புகிறேன்.
இப்படத்தில் VFX பெரும் சவாலாக இருந்தது. இந்தியத் திரைப்படங்களின் தரம் சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரைக்கதை மற்றும் VFX-ல் அதிக திறன் கொண்ட இயக்குனர்கள் பிரசாந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி.
ஹனுமான் படம் உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றது; மக்களின் ஆதரவும் கிடைத்தது. அதனால் மிராய் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகப் பெரிய அளவில் முயற்சி செய்துள்ளோம்.
இப்படத்தில் நாங்கள் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை அமைக்க முயற்சித்துள்ளோம். அதற்காக, கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை தாய்லாந்திலிருந்து வரவைத்தோம். அதுமட்டுமின்றி, நான் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களுக்கு சென்று 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். இப்படத்தில் நீங்கள் காணும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நான் நேரடியாக நடித்துள்ளேன்.
இப்படம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக, ஹிமாலயா, இலங்கை போன்ற பல இடங்களுக்கு சென்று சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளோம்.
அனைவரும் வரும் செப்டம்பர் 12ம் தேதி குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து மிராய் படத்தை கண்டுகளிக்க வேண்டும். இப்படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.” என்றார்.