Apr 26, 2019 06:43 AM

ரசிகர்களை ஏமாற்றமடைய செய்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’!

ரசிகர்களை ஏமாற்றமடைய செய்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’!

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இன்று அவெஞ்சர்ஸ் சீரிஸின் இறுதிப் படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இன்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, இதுவரை செய்யாத பல விஷயங்களை படக்குழு செய்தார்கள்.

 

இப்படத்தின் தமிழ் பதிப்புக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை வசனம் எழுத வைத்ததோடு, ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து பாடல் ஒன்றையும் உருவாக்கினார்கள். மேலும், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆண்ட்ரியா ஆகியோரை டப்பிங்கும் பேச வைத்தார்கள். இப்படி பல வகையில் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்ததோடு, இதுவரை அவெஞ்சர்ஸ் வரிசை படங்களை பார்க்காதவர்களையும், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று இந்தியா மார்வெவ்ல் நிறுவனம் பல கோடிகளை வாரி இறைத்தது.

 

இதற்கிடையே, படம் வெளியாவதற்கு முன்பாகவே இணையதளங்களில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், படத்தின் வசூல் பாதிக்க கூடும் என்று படக்குழுவினரும் அச்சம் அடைந்துள்ளனர்.

 

இந்த நிலையில், இன்று வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு மாஸ் ஹீரோக்களின் படங்களைப் போல காலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

 

பெரும் ஆர்வமாக இருந்த ரசிகர்கள் காலை சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களை போல இந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் இல்லையாம்.

 

இன்று காலை பெங்களூரில் படம் பார்த்த ரசிகர்கள் பலர், “இந்தப் படம் முந்தைய படங்களைப் போல இல்லை. பெரும் எதிர்ப்பார்ப்புடன் வந்து ஏமாந்துவிட்டோம்.” என்று புலம்புகின்றனர். மேலும், இரண்டு சூப்பர் ஹீரோக்கள் படத்தில் இறந்துவிடுவதால், படம் இன்னும் மொக்கையாகி விடுகிறது, என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.