Nov 29, 2019 09:37 AM

தமிழ் சினிமாவில் வராத பேய் கதை! - ‘இருட்டு’ குழு வெளியிட்ட ரகசியம்

தமிழ் சினிமாவில் வராத பேய் கதை! - ‘இருட்டு’ குழு வெளியிட்ட ரகசியம்

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ள திகில் படம் ‘இருட்டு’. இயக்குநர் சுந்தர்.சி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில், விமலா ராமன், சாக்‌ஷி செளத்ரி, சாய் தன்ஷிகா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள்.

 

வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சுந்தர்.சி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர்.சி, “ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக காரணம். அவர் ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் என சொன்னேன். நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விசயங்கள் இருக்கும். நான் ரசிக்கிற படங்கள் வேறு மாதிரி இருக்கும். முழுக்க பயப்படுற மாதிரி ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது இயக்குநராக யாரை போடலாம் எனப் பேசினோம். VZ துரை சாரை சொன்னபோது முதலில் பயந்தேன் அவர் படங்கள் பார்த்து, அவர் வயலண்டாகா இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு அப்பாவி. பேய்ப்படம் பண்ண மாட்டேன் என்றார். அவரை தயார் படுத்தி நிறைய பேய்படங்கள் பார்க்க வைத்தோம். பின் அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விசயம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை. இயக்குநராக  VZ துரை முதல் நாளிலேயே என்னை 10 டேக் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக்கொண்டேன். அவருக்கு திருப்தி வரும் வரை அவர் மீண்டும் மீண்டும்  எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக்கொண்டேன் என்று சொல்வார் ஆனால் நடிகராக அவரிடம் நான் கற்றுக் கொண்டேன். இந்தப்படம் புதிதான பேய் படமாக இருக்கும்.” என்றார்.

 

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசுகையில், “’இருட்டு’ இந்த பெயரை கேட்டவுடன் எல்லோருக்கும் இப்படி ஒரு பெயரா! என ஆச்சர்யம். உலகில் முதலிலிருந்து இருப்பது இருட்டு தான் . வெளிச்சம் வந்து விட்டு போகிறது அவ்வளவு தான். இந்தப்பெயரை சொல்லி நான் இப்படத்தில் பங்கு கொண்டிருக்கிறேன் எனச் சொல்லும்போது இருட்டு உங்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வரட்டும் என வாழ்த்தினார்கள்.  எல்லோரும் தங்கள் படத்தை பொதுவாக வித்தியாசமாக இருக்கிறது என்றே சொல்வார்கள். ஆனால் நான் இப்படத்தில்  அதை உண்மையாக சொல்கிறேன்.  ஊட்டியில் ஒரு இடத்தில் பகலிலேயே இருண்டு போய்விடுகிறது. அந்நேரத்தில் கொலைகள் நடக்கிறது. பகலில் எப்படி இருட்டுகிறது, ஏன் கொலைகள் நடக்கிறது என்பது தான் கதை. இதை துப்பறியும் இன்ஸ்பெக்டராக வாழ்ந்திருக்கிறார் சுந்தர் சி.இப்படத்தின் இயக்குநர் துரை வெற்றிபெற வேண்டும் என்று முழு மூச்சாக உழைப்பவர். இதுவரை வந்த  ஹாரர் படங்களில் உள்ள கிளிஷேக்கள் இந்தப்படத்தில் இருக்க கூடாது என உறுதியாக இருந்தார். ஒவ்வொன்றும் புதிதாக இருக்க வேண்டும் என  கடும் உழைப்பை தந்திருக்கிறார். படத்தில் வேலை செய்திருக்கும் ஒவ்வொருவரிடமும் முழுமையான வேலையை வாங்கியுள்ளார். சுந்தர் சி எனக்கு பிடித்த நடிகர் காவல் அதிகாரி பாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தின் 120 நிமிடத்தில் 100 நிமிடங்கள் உங்களை பதைபதைப்பில் வைத்திருக்கும் திரில்லர் படமாக இது இருக்கும். டிசம்பர் 6 ஆம் தேதி படம் வெளிவருகிறது. ‘இருட்டு’ எல்லோருக்கும் வெளிச்சத்தை கொண்டு வரும்.” என்றார்.

 

நடிகர் வி.டி.வி.கணேஷ் பேசுகையில், “’இருட்டு’ படத்தில்  நடித்ததே புதிய அனுபவம் தான். சுந்தர் சி யிடம் ஒரு படம் செய்யலாம் என போனேன்,  அவர் இப்போது படம் இயக்கவில்லை ஒரு பெரிய படம் நடித்து தருகிறேன், என்றார். VZ துரை யெய் அறிமுகப்படுத்தினேன். சூப்பர் என்றார். பெரிய படமாக செய்யலாம் என்றேன். வழக்கமான படமாக இருக்ககூடாது என்று சொன்னேன். VZ துரை புதிதாக  இஸ்லாம் சம்பந்தமாக ஒரு விசயத்தை பிடித்தார். அது பக்காவாக இருந்தது. ஊட்டியில் ஷுட்டிங் நடத்தினோம் சுந்தர் சி வீட்டுக்கே போகவில்லை அவ்வளவு டெடிக்கேட்டாக உழைத்தார். VZ துரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். படம் பாருங்கள் பிடிக்கும்.” என்றார்.

 

இயக்குநர் VZ துரை பேசுகையில், “இப்படத்தில் மூலமாக எனக்கு கிடைத்த அருமையான விசயம்  சுந்தர் சி சாரின் நட்பு. VTV கணேஷ் சார் தான் இப்படம் உருவாக காரணம். அவர் தான் இப்படத்தை உருவாக்கினார். Screen Scene இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்கள். சுந்தர் சார் பேய் படம் செய்யலாம் என சொன்னபோது நான் வேண்டாம் சார் எனக்கு பயம் சார் நான் பண்ண மாட்டேன் என்றேன். அப்ப நீங்க தான் சரியான ஆள் உலகின் மிகப்பெரிய ஹாரர் இயக்குநர் ஜேம்ஸ் வான் அவரும் பயப்படுபவர் தான் என்று சொல்லி என்னை சமதானப்படுத்தினார். சுந்தர் சாரே ஒரு ஹாரர் இயக்குநர் அவர் படங்கள் கமர்ஷியல் கலந்து இருக்கும்  அவர் ஐடியாக்கள் எல்லாம் பிரமாண்டமாக இருக்கும் என்னுடையது வேறு மாதிரி இருக்கும். ஆனால் அவர் இந்தப்படம் முழுக்க பயக்கற மாதிரியான படமா இருக்கணும் நீங்க டைரக்ட் பண்ணுங்க நான் நடிக்கிறேன் என்றார். அவர் முழு ஈடுபாட்டுடன் இந்தப்படத்தில் உழைத்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத புது விசயத்தை இதில் அறிமுகப்படுத்தியுள்ளோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.