Mar 06, 2018 03:22 AM

’முந்தல்’ படத்திற்காக 5 வருடங்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட ஹீரோ அப்பு கிருஷ்ணா!

’முந்தல்’ படத்திற்காக 5 வருடங்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட ஹீரோ அப்பு கிருஷ்ணா!

ஹீரோக்கள் டூப் இல்லாமல் சண்டைக்காட்சிகளில் நடித்தாலே அதை பல முறை சொல்லிக்கொள்ளும் நிலையில், அறிமுக ஹீரோ அப்பு கிருஷ்ணா, ‘முந்தல்’ படத்திற்காக சத்தமில்லாமல் பல சாகசங்களை செய்ததோடு, தனது உயிரை பனைய வைத்து பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

 

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘முந்தல்’. 49 லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயில் ஒரு கதாபாத்திரம் போல முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும், இதுவரை ரசிகர்கள் பாத்திராத பல இடங்களை தேடிச் சென்று படப்பிடிப்பு நடத்திய இயக்குநர் ஜெயந்த், பல ரிஸ்க்குகளை எடுத்து படத்தின் காட்சிகளை படமாக்கியுள்ளார்.

 

கம்போடியாவில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் உள்ள பழமையான கிணறு ஒன்று இருக்கிறதாம். 150 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில், கொடிய விஷம் கொண்ட பாம்புகள் நூற்றுக்கணக்கில் இருப்பதால், அந்த கிணற்றில் இறங்க யாரையும் அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தை அறிந்த இயக்குநர் அந்த கிணற்றில் இருக்கும் ஓலைச்சுவடியை ஹீரோ எடுப்பது போல காட்சி எடுக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், பலர் அது ரொம்ப ஆபத்தான கிணறு, அதில் இறங்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். யாருடைய பேச்சையும் கேட்காத இயக்குநர் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹீரோ அப்பு கிருஷ்ணாவை கிணற்றில் இறங்க சொல்லியிருக்கிறார். அவரும் இயக்குநர் சொன்னதை அப்படியே கேட்டு, விஷ பாம்புகள் நிறைந்த கிணற்றில் இறங்கி நடித்திருக்கிறார். அவரை கிணற்றில் இறங்க சொன்னாலும், என்ன நடக்கும் என்ற பயத்தோடு தான் இயக்குநர் அந்த காட்சியை படமாக்கினாராம். அப்படிப்பட்ட ரிஸ்க் எடுத்து படமாக்கிய அந்த காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் விதத்தில் வந்துள்ளதாம்.

 

அதேபோல், அந்தமான் கடலில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் படகில் பயணிக்கும் போது எதிர்பாரதவிதமாக ஹீரோ கடலில் விழுந்துவிட்டாராம். அதே போட்டில் இருந்த இயக்குநர் சட்டென்று இதை கவனிக்காமல் சிறிது தூரம் போனவுடன் தான் கவனித்தாராம். உடனே படகை திருப்பி ஹீரோவிடம் வந்தபோது அவர் நீந்தியபடி இருந்தாராம். முதலைகள் கொண்ட அந்தமான் கடலில் ஹீரோ விழுந்ததை அறிந்த இயக்குநர் சிறிது நேரம் பதறிவிட்டாராம். இப்படி படப்பிடிப்பு முழுவதுமே அவ்வபோது ஏதாவது ரிஸ்க்குகளை எடுத்தவாறு இருந்த ஹீரோ அப்பு கிருஷ்ணா, ‘முந்தல்’ படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் ஜெயந்திடம் 5 வருடங்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

 

குங்பூ, சிலம்பம், நீச்சல் பயிற்சி, யோகா என பல பயிற்சிகளை மேற்கொண்டதால் தான் இப்படத்தின் ஆக்‌ஷன் மற்றும் அட்வென்சர் காட்சிகளில் ஹீரோ அப்பு கிருஷ்ணா, அசால்டாக நடித்தார் என்று இயக்குநர் ஜெயந்த் கூறினார்.

 

எதற்கு எடுத்தாலும் பணம்..பணம்...என்று இல்லாமல், பிறருக்கு உதவி செய்யும் நோக்கத்தையும் இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மெசஜை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு சொல்லியிருக்கும் ‘முந்தல்’ விரைவில் வெளியாக உள்ளது.