ஊடகங்களும், மக்களும் கொடுத்த நம்பிக்கை! - மோதலுக்கு தயாரான ‘காளிதாஸ்’
எதிர்ப்பார்ப்புகளுடன் வரும் முன்னணி நடிகர்களின் படங்கள் சில எதிர்ப்பார்த்த வெற்றி பெறாமல் போவதும், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி வெளியாகும் சில சிறு முதலீட்டு திரைப்படங்கள் பெரிய வெற்றி பெறும் அதிசயம், அவ்வபோது கோலிவுட்டில் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு அதிசயத்தை மீண்டும் நிகழ செய்திருக்கிறது கடந்த வாரம் பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’.
அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியிருக்கும் இப்படத்தில் பரதி ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக அன் சீத்தல் நடித்திருக்கிறார். ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம், ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
கடந்த வாரம் வெளியான இப்படம், கடந்த வாரம் வெளியான சுமார் 10 படங்களில் சிறந்த படமாக அடையாளம் காணப்பட்டு ரசிகர்களால் மட்டும் இன்றி இயக்குநர்கள் சசி, மோகன் ராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்களினாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
காரணம், இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையோடு படத்தை இயக்குநர் ஸ்ரீ செந்தில் நகர்த்திய விதமும் தான். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருந்தாலும், குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு தரமான படமாக இப்படத்தை இயக்குநர் ஸ்ரீ செந்தில் கையாண்டிருப்பதோடு, கணவன், மனைவி சேர்ந்து பார்க்க வேண்டிய ஒரு படமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார்.
சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் என்றாலும், அதில் நல்ல கருத்தை, நல்லவிதமாக சொல்லும்போது அது பொழுதுபோக்கையும் தாண்டி வாழ்க்கைக்கான ஒரு பாடமாகவும், பதிவாகவும் மாறிவிடும். அப்படி ஒரு படமாக தான் ரசிகர்கள் ‘காளிதாஸ்’ படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது, தமிழகம் முழுவதும் இப்படத்திற்காக திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து படக்குழுவினர் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் இன்னும் அதிகமாக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக, நடிகர் பரத்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதால் அவரும் உற்சாகத்தோடு காளிதாஸ் படத்திற்காக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விசிட் அடிக்க கிளம்பிவிட்டார்.
இந்த நிலையில், ‘காளிதாஸ்’ படத்தை ரசிகர்கள், ஊடங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கொண்டாடுவது போல, விநியோகஸ்தர்களும் கொண்டாட தொடங்கிவிட்டார்கள். ஒரு நல்ல படத்தை, அதுவும் தற்போதைய காலகட்டத்திற்கு மிக முக்கியமான படமாக இருக்கும் இப்படத்தை மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டும், என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவது இப்படத்திற்கான தியேட்டர்களை விநியோகஸ்தர்கள் அதிகரிக்கச் செய்துள்ளார்கள். அதே சமயம், வரும் வாரம் சில பெரிய படங்கள் வெளியாவதால், அப்படங்கள் தியேட்டர்களை கைப்பற்றி வருகின்றன.
இதனால், காளிதாஸ் படத்திற்கு தியேட்டர்கள் ஏரியாவில் திடீர் சிக்கல் ஏற்பட்டாலும், மக்கள் மற்றும் ஊடகங்களின் பாராட்டுக் கொடுத்த நம்பிக்கையால், வர இருக்கும் பெரிய படங்களை விட ‘காளிதாஸ்’ சிறப்பான படம், என்ற பெயரை நிச்சயம் வாங்கும் என்று படக்குழுவினர் நினைக்கிறார்கள். அதனால், அந்த பெரிய படங்களுடன் மோதி வெற்றி பெறுவதற்கு தற்போது தயாராகிவிட்டார்கள்.
நடிகர் பரத் மற்றும் இயக்குநர் ஸ்ரீசெந்தில், தமிழகம் முழுவதும் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்கள். ரசிகர்களும் படத்தை வெகுவாக பாராட்டுவதோடு பரத்தின் நடிப்பு மற்றும் ஸ்ரீ செந்திலின் இயக்கத்தையும் வெகுவாக பாராட்டுவதால் ‘காளிதாஸ்’ இன்னும் பல வாரங்களை வெற்றியுடன் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்ந்த பத்திரிகைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ‘காளிதாஸ்’ படக்குழு சமீபத்தில் பத்திரிகையாளர்களை சென்னையில் சந்தித்தனர். அதில், படம் அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.