Dec 16, 2019 05:28 AM

என் காதலை இவர் மூலம் தான் வெளிப்படுத்தியிருக்கிறேன் - சிவகார்த்திகேயன்

என் காதலை இவர் மூலம் தான் வெளிப்படுத்தியிருக்கிறேன் - சிவகார்த்திகேயன்

’இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘ஹீரோ’. சூப்பர் மேன் கதையம்சம் கொண்ட இப்படத்தை கே.ஜே.ஆர்  ஸ்டுடியோஸ் சார்பில் கோடப்படி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கிறார். இதில் ஹீரோயினாக கல்யாணி பிரிதர்ஷன் நடித்திருக்கிறார். இந்தி நடிகர் அபேய் தியோல் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய படக்குழுவினர் தயாரிப்பாளர் கோடப்படி ஜே.ராஜேஷ், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஊதியத்தை படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கொடுத்துவிடுகிறார், இவரைப் போல ஒரு தயாரிப்பாளரை பார்த்தது இல்லை, என்று பாராட்டினார்கள்.

 

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசுகையில், “’இரும்புத்திரை’ படம் பண்ணும் போதே சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று பேசினோம். அப்போது என் மனதில் ஒரு கதை இருந்தது, அதேபோல் சிவகார்த்திகேயனும் ஒரு விஷயத்தை படமாக பண்ணலாம் என்று நினைத்திருந்தார். இருவரும் சந்தித்து பேசும் போது, இருவரும் ஒரே விஷயத்தை தான் நினைத்திருந்தோம். அதிலேயே எங்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்து விட்டது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இதை நான் சொல்லக் கூடாது, படத்தை பார்த்துட்டு நீங்க சொல்லுங்க.” என்றார்.

 

சிவகார்த்திகேயன் பேசுகையில், “ஹீரோ நான் ரொம்ப விரும்பி நடித்த படம். ஒரு சூப்பர் ஹீரோ போன்ற கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப சந்தோஷம். அதை விட மிகப்பெரிய சந்தோஷம் யுவன் சங்கர் ராஜா இசையில் நடித்தது தான். நான் யுவனின் தீவிர ரசிகன். நான் மட்டும் அல்ல தமிழகத்தின் இளைஞர்கள் அனைவரும் யுவனின் ரசிகர்களாக தான் இருப்பார்கள். காரணம், அவருடைய பாட்டு இளைஞர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். நிச்சயமாக இளைஞர்களின் சோல் என்றே சொல்லலாம். இப்போதும் அவருடைய பாடல்கள் கேட்டால், அதில் எவ்வளவு காதல் இருக்கும் என்பது தெரியும். மித்ரன் என்னிடம் கதை சொன்ன போது, அவரிடம் நான் முதலில் யுவன் தானே இசை, என்று தான் கேட்டேன், வேறு எதுவும் கேட்கவில்லை.

 

இளைஞர்களின் காதலை வெளிப்படுத்த யுவனின் பாட்டு தான் வழி. நானும் அவரின் பாடல்கள் மூலம் தான் பல முறை என் காதலை வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்த படத்திற்கு யுவனின் பாடல் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அதற்கு யுவனுக்கு நன்றி” என்றார்.

 

Hero Trailer Launch

 

ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வரும் டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.