நான் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் இது தான்! - மனம் திறந்த ரஜினிகாந்த்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘தர்பார்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மிகப்பெரிய பொருட்ச் செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருக்கிறார். நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழ் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள தர்பார் படத்தின் மூன்று டிரைலர்கள் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொள்ள, சிறப்பு விருந்தினர்களாக ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ”எனக்கு போலீஸ் வேடத்தில் நடிக்கவே பிடிக்காது. எல்லோரும் ஸ்டைல் ஸ்டைல் என்கிறார்கள், என்னிடம் எதை அவர்கள் ஸ்டைல் என்கிறார்கள் எனத் தெரியவில்லை.” என்று தெரிவித்தவரிடம், எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு, திருநங்கை வேடத்தில் நடிக்க விரும்புவதாக பதில் அளித்தார்.
மேலும், தர்பாரில் இருக்கும் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரம் சோகமான கதாபாத்திரம், மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனை விட சிறப்பானதாக இருக்கும், என்றவர், அமிதாப் பச்சன் தன்னை அரசியலில் ஈடுபட வேண்டாம், என்று கூறினார். ஆனால் அதை தன்னால் கடைபிடிக்க முடியவில்லை, என்றும் தெரிவித்தார்.