Mar 26, 2018 05:53 AM

இயேசு குறித்து தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா!

இயேசு குறித்து தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா!

ரொம்ப அமைதியாக இருக்கும் இளையராஜா எப்போதாவது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாகவிட்டது.

 

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட இளையராஜா இயேசு உயிர்த்தெழுந்தது குறித்து தவறாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல் எவரும் இல்லை. இயேசு உயிர்த்தெழுந்ததாக கூறுவார்கள், ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. உலகிலேயே உண்மையிலேயே உயிர்த்தெழுந்த ஒரே மகான் ரமண மகரிஷி மட்டும் தான். அதுவும் அவரது 16 வயதில்.” என்று தெரிவித்திருந்தார்.

 

இளையராஜாவின் இந்த பேச்சு கிறிஸ்துவ மக்களை வேதனை அடையச்செய்துள்ளது. தங்களது மத நம்பிக்கையை புண்படுத்தும்படி இளையராஜா பேசியிருப்பதாக கூறி, சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சென்னை தியாகராய நகர் மேம்பாலம் அருகே போராட்டம் நடத்த முயன்ற போது, போலீசார் அவர்களை கைது செய்தனர்.

 

மேலும், தமிழகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் இளையராஜாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருவதோடு, சமூக வலைதளங்களிலும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.