’இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிர் பலி! - காரணம் இதுவா?

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். மிகப்பெரிய பொருட்ச் செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பலவேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள ஈ.வி.பி ஸ்டியோவில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்த ராட்சத கிரேன், அறுந்து விழுந்ததில், உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், புரொடக்ஷன் உதவியாளர் மது என மூன்று பேய் உயிரிழந்தனர். சுமார் 10 பேரு பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மிக மோசமான இந்த விபத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சியடைந்திருப்பதோடு, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் வருகிறது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த விபத்து குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்ததா, இல்லையா, என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே சமயம், இதுபோன்ற விபத்துகள் பாதுகாப்பு முறையை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதனாலேயே நடப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும், தானியங்கி தற்காலிக பளு தூக்கி, கிரேன் உள்ளிட்டவைகளுக்கு முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்துவதால், அதை பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயன்படுத்துபவர்கள் அறிந்துக் கொள்ளாமல் பயன்படுத்துவதினால் தான் இதுபோன்ற விபத்துகளும், உயிர் பலியும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.