Sep 01, 2025 05:21 PM

நடிகை அர்ச்சனாவுடன் திரை பகிர்ந்தது பெருமையாக இருந்தது - பாலாஜி சக்திவேல் பெருமிதம்

நடிகை அர்ச்சனாவுடன்  திரை பகிர்ந்தது பெருமையாக இருந்தது - பாலாஜி சக்திவேல் பெருமிதம்

தனித்துவமான படைப்புகள் மூலம் இயக்குநராக மக்கள் மனதில் இடம் பிடித்த பாலாஜி சக்திவேல், தற்போது நடிகராக தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கும் விதத்தில் நடித்து பாராட்டு பெற்று வருகிறார். அவர் ஏற்கும் கதாபாத்திரங்களும், நடிக்கும் திரைப்படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறுவதோடு, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களாக அமைகிறது. 

 

சமீபத்தில் வெளிவந்த ’குடும்பஸ்தன்’ மற்றும் ’டிஎன்ஏ’ படங்களில் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த அவர், தற்போது ’காந்தி கண்ணாடி’ படத்தின் மூலம் மேலும் ஒரு முறை ரசிகர்களின் இதயங்களை வெல்ல தயாராக இருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் விளம்பர காட்சிகளிலேயே சினிமா ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளார்.

 

’காந்தி கண்ணாடி’ படத்தில் நடித்தது குறித்து கூறிய பாலாஜி சக்திவேல், “நான் பல வருடங்கள் இயக்குநராக இருந்து வந்திருக்கிறேன். நடிகர்களின் மூலம் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெடுப்பதைப் பார்ப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. ஆனால், மறுபுறம் நிற்கும் நடிகராக இருப்பது சுலபமல்ல என்பதைக் கற்றுக் கொண்டேன். நான் இணைந்த ஒவ்வொரு திட்டமும் சிறந்த இயக்குநர்களின் படைப்பாக இருந்தது. அதுபோலவே காந்தி கண்ணாடியை ஷெரீஃப் விவரித்தவுடன் உடனே சம்மதித்தேன். மிகவும் அழகான, உணர்ச்சிமிகு திரைக்கதை அது. இறுதிப் படத்தைப் பார்த்தபோது அவர் எவ்வளவு நன்றாக உருவாக்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி.

 

இந்த படத்தில் கே.பி.ஒய் பாலா நிச்சயமாக கோலிவுட்டின் ‘கண்டெண்ட் டிரிவன் ஸ்டார்’ ஆகப் போகிறார். அர்ச்சனா ஒரு அபாரமான திறமைசாலி, அவருடன் திரை பகிர்ந்தது பெருமையாக இருந்தது. காந்தி கண்ணாடி பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

 

காந்தி கண்ணாடி திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஷெரீஃப். தயாரிப்பு ஆதிமூலம் க்ரியேஷன்ஸ் சார்பில் ஜெய்கிரண். படத்தில் கே.பி.வை பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயக, கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை – விவேக்–மெர்வின், ஒளிப்பதிவு – பாலாஜி கே.ராஜா, திருத்தம் – சிவானந்தீஸ்வரன்.