யோகி பாபுவை வைத்து படம் தயாரிக்கும் ‘களவாணி 2’ வில்லன்!
விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர் துரை சுதாகர். வில்லத்தனத்தையே வித்தியாசமாக கையாண்ட துரை சுதாகர், படத்தில் வில்லனாக நடித்தாலும், ரசிகர்கள் மனதில் தனது கதாபாத்திரம் மூலம் ஹீரோவாக இடம் பிடித்துவிட்டார்.
தஞ்சை மாவட்டத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான துரை சுதாகர், அப்பகுதிகளில் ரியல் ஹீரோவாக வலம் வந்தாலும், சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். வில்லனாக மட்டும் இன்றி, குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தயாராக இருப்பவர், நல்ல கதைக்காகவும், கதாபாத்திரங்களுக்காகவும் கோலிவுட்டில் முகாமிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது, வரலட்சுமியுடன் இணைந்து ‘டேனி’ என்ற படத்தில் நடித்து வரும் துரை சுதாகர், மேலும் சில பிரபல இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் துரை சுதாகர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் தயாரிக்கும் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். ‘கல்லூரி’ அகில், மனிஷாஜித் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, கெளசல்யா ஆகியோர் நடிக்க, வில்லனாக சூப்பர் சுப்பராயண் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் டிரைலர் யூடியூபில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், இப்படத்தில் நடிக்காமல் தயாரிப்பு பணியை மட்டுமே கவனித்திருக்கும் நடிகர் துரை சுதாகர், பிரச்சினையில் இருந்த ஒரு படத்திற்கு உதவி செய்ய நினைத்தேன், இறுதியில் நானே அந்த படத்தை தயாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் தொடர்ந்து தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்துவேன், என்று நினைத்துவிட வேண்டாம், நடிப்புக்கு தான் என்றுமே முதலிடம் கொடுப்பேன், என்று தயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததற்கான காரணத்தை தெரிவித்தார்.