May 01, 2018 05:50 AM

கமல் ஹாசனின் ’விசில்’ ஆப் - செயல்படும் விதம் இதுதான்!

கமல் ஹாசனின் ’விசில்’ ஆப் - செயல்படும் விதம் இதுதான்!

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அதற்கு முன்பாகவே மக்களது குறைகளை களைவதற்கான வழியாக ‘விசில்’ என்ற ஆப் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

 

முதல் கட்டமாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆப், இரண்டு வழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

முதலாவது, ஒரு குடிமகனாகத் தங்கள் பகுதிகளில் காணும் குற்றங்கள், குறைகளைப் பதிவு செய்யலாம். இவர்கள் சிட்டிசன் என அழைக்கப்படுகிறார்கள். புகார்களுக்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை சமர்ப்பிக்கலாம். இல்லை என்றாலும் பரவாயில்லை, புகார் செய்கிறவர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும்.

 

இரண்டாவது வகை சாம்பியன் என்று அழைக்கப்படுகிறது. சாம்பியனாக பதிவு செய்பவர்கள் கட்டாயம் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆப் அட்மின்களோடு தொடர்புடைய சாம்பியன்களின் வேலை, வந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து நேரடியாகச் சென்று விசாரிப்பது. 

 

எந்தவொரு புகார் குறித்தும் ஐந்து சாம்பியன்கள் கள ஆய்வு செய்வார்கள். அந்த ஐந்து பேரில் மூன்று பேர் புகார் உண்மை என அப்ரூவல் தந்தால் மட்டுமே புகார் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

 

சாம்பியன்கள் அப்ரூவல் தந்துவிட்டால், அந்தப் புகார்களைச் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் எடுத்துச்சென்று தீர்வுக்கு முயற்சி செய்வார்கள்.

 

தங்களுடைய புகார் எந்த மட்டத்தில் உள்ளது என்பதைப் புகார் அளித்தவர்கள் டிராக் செய்து பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

 

தவிர, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலும் இந்த ஆப்பில் உள்ளது. இதன் மூலம், புகார் எந்தத் தொகுதியில் உள்ளதோ அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கவனத்துக்குச் செல்லும் எனத் தெரிகிறது.

 

தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியிலும் புகாரை அனுப்ப முடியும் என்பது கூடுதல் தகவல். இந்த முறையில் தான் ‘விசில்’ ஆப் செயல்படுமாம்.

 

ஆப்பை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன், இது குறைகளை ஒரே நொடியில் தீர்த்து வைக்கிற மந்திரக் கோல் என்று சொல்ல மாட்டேன். அதேபோல காவல்துறைக்கோ, அரசாங்கத்துக்கோ மாற்றா நாங்க இந்த ஏற்பாட்டை செய்யவில்லை. சொல்லப்போனா, காவல்துறை, மீடியாவுக்கே கூட உதவுறதாவே இந்த விசில் இருக்கும். ஆனால், சாமானியர்கள் எழுப்பும் இந்த ஒலி தப்பு செய்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, ஒரு அபாயச் சங்கு.” என்று தெரிவித்தார்.