Jan 27, 2018 12:45 PM

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் கார்த்தி!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் கார்த்தி!

‘பருத்திவீரன்’ என்ற தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைக் கொடுத்த கார்த்தி, தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘நான் மகான் அல்ல’ என்று வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தவர், ‘சகுனி’ என்ற படத்தில் இருந்து தொடர்ந்து தோல்விப் படங்களாகவே கொடுத்து வந்தார்.

 

அறிமுக இயக்குநர் சங்கர் தயாள் இயக்கிய ‘சகுனி’ கார்த்தியின் சினிமா கேரியரை நாசமாக்கும் அளவுக்கு பிளாப் படமாக அமைந்ததோடு, அந்த படத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்விப் படங்களாகவே அமைந்தது. இதனால் கடுப்பான கார்த்தி, இனி அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்ததோடு, ஒரு வெற்றிப் படமாவது கொடுத்த இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்பதிலும் உறுதியாக இருந்தார்.

 

அதன் பிறகு 2014 ஆம் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ படம் கார்த்திக்கு பிரேக்காக அமைந்தது. அதன் பிறகு ‘கொம்பன்’, ‘தோழா’ என்று தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

 

இந்த நிலையில், அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்க மாட்டேன், என்ற தனது பிடிவாதத்தில் இருந்து பின் வாங்கியிருக்கும் கார்த்தி, மீண்டும் அறிமுக இயக்குநர் ஒருவரது படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

 

தற்போது, பாண்டிராஜ் இயக்கத்தில் ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் பிறகு ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கிறார். இப்படம் முடிந்த பிறகு அறிமுக இயக்குநர் ஒருவரது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் சிங்கம் 2 மற்றும் விரைவில் திரிஷா நடிப்பில், மாதேஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘மோகினி’ ஆகியப் படங்களை தயாரித்துள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

கார்த்திக்கு அறிமுக இயக்குநர் சொன்ன கதை பிடித்திருந்ததால் அவர் உடனே ஓகே சொன்னாலும், அவரது நெருங்கிய நண்பர்கள், எதற்கு மீண்டும் ரிஸ்க் எடுக்கிறாய்? என்று எச்சரித்துள்ளார்களாம்.