Jan 29, 2018 08:24 AM

நாட்டையே கலங்க வைத்த பிரச்சினை பற்றிய படத்தில் கதிர்!

நாட்டையே கலங்க வைத்த பிரச்சினை பற்றிய படத்தில் கதிர்!

‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ ஆகியப் படங்களை தொடர்ந்து கதிர் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.  எம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா என்பவர் இயக்குகிறார். இவர் ‘மன்னார் வளைகுடா’ படத்தை இயக்கிய பிரபாகரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்சினையை மையமாக வைத்து உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா கூறுகையில், “இது கிராமத்திலிருந்து நகரம் செல்கிற கதை. கிராமத்திலிருக்கும் வாலிபனான நாயகன் ஒரு பெரிய பிரச்சினைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது. நாயகன் அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டான், முடிவு என்ன என்பதே கதை. சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்சினை தான் அந்த பிரச்சினை.

 

இப்படத்தின் கதையை உருவாக்கி அதற்கான சரியான நாயகன் தேடிய போது வெகு பொருத்தமாகக் கிடைத்தவர்தான் கதிர். அவர் கதை பிடித்து சம்மதித்தவுடன் எங்களுக்கு முழு திருப்தி. கதிருக்கு 'மதயானைக் கூட்டம்' , 'கிருமி ' படங்களுக்குப் பிறகு  இப்படம் பெயர் சொல்லும் ஒன்றாக இருக்கும். 

 

‘பென்ஹர்’ மற்றும் ‘உழவன் மகன்’ படங்களுக்குப் பிறகு இப்படத்தில் வரும் ரேக்ளா ரேஸ் பேசப்படும் அளவுக்கு படமாக்கப்பட உள்ளது. தஞ்சைப் பகுதியில் தொடங்கும் படப்பிடிப்பு கடம்பூர் மலைப் பகுதி, சென்னை என்று நகர இருக்கிறது.” என்றார்.

 

இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. 

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு பாண்டி அருணாச்சலம்  ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ‘உறுதிகொள்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். இவருடன் இன்னொருவர் சரவணன் ஜெகதீசனும் இணைந்துள்ளார். நவீன் சங்கர் இசையமைக்கிறார். இவர் ‘விசிறி’ படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘சண்டிவீரன்’ புகழ் மணி அமுதன் பாடல்கள் எழுதும் இப்படத்தின் கலையை தியாகராஜன் நிர்மாணிக்க எம்.சேது பாண்டியன் நிர்வாக தயாரிப்பு பணியை கவனிக்கிறார்.