Aug 14, 2021 01:58 PM

‘இண்டியானா ஜோன்ஸ்’ பாணியில் சாகச திரைப்படமாக உருவாகும் ‘கொற்றவை’

‘இண்டியானா ஜோன்ஸ்’ பாணியில் சாகச திரைப்படமாக உருவாகும் ‘கொற்றவை’

’பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘அட்டக்கத்தி’ உள்ளிட்ட பல வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் புதிய டிரெண்ட் செட்டராக திகழ்ந்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். தயாரிப்பாளராக பலரை தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகப்படுத்தியவர், ’மாயவன்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது அப்பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

 

சி.வி.குமார் இயக்கும் மூன்றாவது படத்திற்கு ’கொற்றவை : தி லெகசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 1980-களில் வெளியாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘இண்டியானா ஜோன்ஸ்’ பாணியில், வரலாற்று பின்னணியை கொண்ட சாகச திரைப்படமாக உருவாகிறது. மேலும், மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம், 70 சதவீதம் சமகாலமாகவும், 30 சதவீதம் வரலாற்று பின்னணியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளியாகும் இரண்டாவது மற்றும் மூறாவது பாகங்கள் முழுக்க முழுக்க சாகசம் நிறைந்தவகையாக உருவாக உள்ளது.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படம் குறித்து கூறிய இயக்குநர் சி.வி.குமார், ”இந்த திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இளம் வயது முதலே எனக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகம். எனது தந்தையின் அலுவலகத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்ற போது வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். சினிமா துறைக்கு வந்தபோது சரித்திரப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்பொழுது அந்த ஆசை நிறைவேறியுள்ளது.” என்றார்.

 

CV Kumar

 

படத்தின் நாயகன் ராஜேஷ் கனகசபை கூறுகையில், “படப்பிடிப்பின் முதல் நாளில் இருந்தே ஒரு அச்சம் கலந்த சுவாரசியம் இருந்தது. இந்த அனுபவம் எனக்கு புதிதாக இருந்தது. இரண்டாம் பாகம் இதை விட பிரமாண்டமாக இருக்கும் என்றும், அதற்கு இன்னும் அதிக உழைப்பு தேவைப்படும் என்று இயக்குநர் கூறியுள்ளார். இரண்டாம் பாகத்திற்கு மனதளவில் தயாராக இருக்கிறேன்,” என்றார்.

 

தொல்பொருள் ஆய்வாளராக நடித்திருக்கும் நாயகி சந்தனா ராஜ் படம் குறித்து கூறுகையில், “எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக சி.வி.குமார் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் எங்கள் மீது வைத்த நம்பிக்கை எங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைத்தது. இந்தப் படம் ஒரு மிக பெரிய அனுபவப் பாடமாக இருந்தது,” என்றார்.

 

புதையல் வேட்டை தொடர்பான கதையாக அமைந்துள்ள கொற்றவையில், 2000 வருடங்களுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலை கண்டறிய நாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டிருப்பதோடு, ஏன் அந்த புதையல் மறைக்கப்பட்டது என்பதும் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

 

Kotravai Poster

 

ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாக உருவாகி வரும் இப்படத்தை மயில் பிலிம்ஸ் டாக்டர் கே.பிரபு தயாரிக்க, எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, இக்னேஷியஸ் அஷ்வின் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.கே கலையை நிர்மாணிக்கிறார்.

 

மிகப்பெரிய பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாரகி வரும் இப்படத்தின் முதல் பாகமான ‘கொற்றவை : தி லெகசி’-யின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.