”சினிமாவை வாழ விடுங்கள்” - ‘தடை அதை உடை’ பட இயக்குநர் ஆதங்கம்

காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, ’அங்காடித்தெரு’ மகேஷ், ’திருக்குறள்’ குணாபாபு நடிப்பில், 1990-களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தடை அதை உடை’.
1990-களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தன்னந்தனியாக போராடி தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மைக்கதையையும், சமகாலத்தில் சோசியல் மீடியா, கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் மாற்றங்கள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் மிக சுவாரஸ்யமாக சொல்லும் திரைப்படம் இது. அத்துடன் சேர்ந்து தஞ்சையின் பண்பாடு, மக்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் சொல்லாத வகையிலும், நெற்களஞ்சிய மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையிலும் இப்படம் உருவாகியுள்ளது.
வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், நடிகர் அருள்தாஸ், இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சாய் சுந்தர் பேசுகையில், “இது என் முதல் படம், முதல் மேடை.என்னுடைய பாடல்கள் இசை உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் பாடிய சின்னப்பொண்ணு அக்கா, காளிதாஸ், சர்வேஷ் அண்ணன் உட்பட அனைவருக்கும் நன்றி. இயக்குநர் அறிவழகன் தான் எல்லாப்பாடல்களையும் எழுதினார். மிக அழகாகவே எழுதியுள்ளார். என் நண்பன் சூர்ய தேவன் ஒரு பாடல் எழுதியுள்ளான். இந்த வாய்ப்பு தந்த அறிவழகன் சாருக்கு நன்றி. படம் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.” என்றார்.
நடிகர் குணா பாபு பேசுகையில், “எங்களுடைய டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். சின்ன டீம் எல்லோரும் சேர்ந்து உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். நான் நடித்த திருக்குறள் படம் யூடுயூப்பில் இருக்கிறது அனைவரும் பாருங்கள். அருள்தாஸ் அண்ணன் எங்களுக்காக வந்துள்ளார். அவருடன் நான் விக்ரம் படத்தில் வேலை பார்த்தேன். அவர் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவருடன் வேலை பார்த்தது சந்தோசம். கேடி என்கிற கருப்புதுரை பார்த்து, பாரி அண்ணன் அறிவழகன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அப்படித் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. திரைக்கதை படிக்கும்போது அத்தனை விவரங்கள் நுணுக்கமாக இருந்தது. மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார். முயன்றே எழுவோம், விழுந்தே எழுவோம் என ஒரு வரி படத்தில் வருகிறது அனைவருக்கும் ஊக்கம் கொடுக்கும் வரிகள். எல்லோரும் திரைக்கு வந்து படம் பாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகர் அருள்தாஸ் பேசுகையில், “இந்த படக்குழுவில் வெகு சிலரை மட்டும் தான் தெரியும். என் கே ஆர் என் மாப்பிள்ளை, அவர் என்னுடன் தமிழ்க் குடிமகன் படத்தில் நடித்தார் அது மூலம் தான் பழக்கம். இயக்குநர் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர். அவரே சம்பாதித்த பணத்தில் அவரது சொந்த ஊரில் படமெடுத்துள்ளார். வாய்ப்புத் தேடும் இளைஞர்களுக்கு வாய்பு கொடுத்ததற்காக அவரை கண்டிப்பாக பாராட்டலாம். எல்லோருமே திறமையாளர்கள். ஒளிப்பதிவாளர் சிறப்பாக செய்துள்ளார். இசையமைப்பாளர் நன்றாக இசையமைத்துள்ளார். இந்தப்படம் மூலம் அவருக்கு இன்னும் வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர் பாரி நல்ல ரோல் செய்துள்ளார். எல்லா நடிகர் நடிகையர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த முயற்சி எல்லோருக்கும் வெற்றியைத் தரட்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
திருக்குறள் படத்தின் இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் பேசுகையில், “இந்தப்படத்தின் பெயர் மிக முக்கியமானது. உலகளவில் பார்த்தால் எழுத்து தடை செய்யப்பட்டது, நாடகங்கள் தடை செய்யப்பட்டது, சினிமா தடை செய்யப்பட்டது. அந்தவகையில் தடை அதை உடை எனும் இப்படம் ஜெயிக்க என் வாழ்த்துக்கள். 80 களில் எல்லாத் தமிழர்களும் படம் பார்த்தார்கள் இன்று 30 சதவீதம் பேர் தான் படம் பார்க்கிறார்கள். இவ்விழாவிற்கு வரக் காரணம் எங்கள் படத்தில் நடித்த குணா தான். என் படத்தில் குதிரை சவாரியில் உயிரை பணயம் வைத்து நடித்தார். அவர் அர்ப்பணிப்பு பெரிதாக இருந்தது. இந்தப்படக்குழுவினர் பெரும் உழைப்பில் இப்படத்தை எடுத்துள்ளனர். புதிய குழு ஜெயிக்க என் வாழ்த்துக்கள்.” என்றார்.
தடை அதை உடை படத்தின் இயக்குநர் அறிவழகன் பேசுகையில், “இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. இந்த விழாவில் எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் எல்லோரும் இரத்தம் வரும் அளவு உழைத்துள்ளனர். அவர்கள் உழைப்பை எவ்வளவு சொன்னாலும் போதாது. எல்லா நடிகர்களுக்கும் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். என் அப்பா ஷீட்டிங்கில் இருந்தார், விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டமாக இருக்கிறதே என்றார். எடுப்பதே கஷ்டம் என்றால் 36 மணி நேரம் நடிப்பது எவ்வளவு கஷ்டம். அவர்களுக்கு நன்றிகள். எல்லோரும் சொந்த பணத்தை போட்டு எடுத்ததற்காக ஊரே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏன் வேண்டாத வேலை என்றார்கள். ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு காரணம் மக்களும் பத்திரிக்கையாளர்களுன் தான். நல்ல படைப்பை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நடிகர் குணா நன்றாக வர வேண்டும் வாழ்த்துக்கள். என் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரும் அளவு திறமை இருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாடலாசிரியருக்கு சம்பளம் தரவேண்டுமே, நம் படத்தில் யாரும் என்னை கேட்கமாட்டார்கள் என நானே பாடல்கள் எழுதிவிட்டேன். அடுத்த படத்தில் புதிய பாடலாசிரியருக்கு வாய்ப்பு தருவேன். படம் 1 மணி நேரம் 53 நிமிடம் மட்டுமே. பரபரவென போகும், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். ஒரே ஒரு விசயம் சினிமாவை வாழ விடுங்கள். சினிமா பிஸினஸ் என்றால், ஒரு மாதம் சினிமா எடுக்காமல் இருந்தால் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிடும், ஆனால் விமர்சகர்கள் படத்தை விமர்சிக்காவிட்டால் எதுவும் நடக்காது. தயவு செய்து சினிமாவை வாழ விடுங்கள். இந்தப்படம் உங்களை யோசிக்க வைக்கும், உங்கள் வாழ்க்கையை மாற்றும், அனைவரும் பாருங்கள் நன்றி.” என்றார்.