Jan 30, 2018 07:21 AM

சிறிய படங்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கும் ‘மனுசனா நீ’ பட இயக்குநர்!

சிறிய படங்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கும் ‘மனுசனா நீ’ பட இயக்குநர்!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் திரும்பும் இடங்களிலெல்லாம் நம் கண்ணுக்கு படுவது ‘மனுஷனா நீ’ என்ற போஸ்டர் தான். H3 சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து கஸாலி இயக்கியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் தலைப்பே இப்படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்துதிருக்கிறது. 

 

பொய், பித்தலாட்டங்கள், கோடிக்கணக்கில் கொள்ளை எல்லா தொழிலிலும், துறையிலும் இருக்கும். அப்படி மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய ஒரு துறையில் பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது ‘மனுசனா நீ’.

 

துபாயில் தொழில் செய்து அனுபவமுள்ள கஸாலி, சினிமா மீதிருந்த நீண்ட காதலால் தனது முதல் திரைப்படத்தை இயக்கும்போது பலவிதமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்தார். தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன், வெளியீடு என எல்லாத்துறைகளில் உள்ள பிரச்சினைகளையும் நேரடியாக சந்தித்த அனுபவம் கஸாலியை யோசிக்க வைத்தது. தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் படங்களை விட வெளியாகாமல் போகிற படங்கள் பல மடங்கு இருக்கின்றன. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன காரணங்கள் என்பதை நேரடியாக தன் அனுபவத்தில் கண்கூடாகக் கண்ட கஸாலி, அவர்களுக்கு உதவும் நோக்கில், ‘H3 சினிமாஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிறிய படங்களுக்கும், அதன் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் முயற்சியாக பிரச்சனையில் சிக்கியுள்ள படங்களை முடித்துக் கொடுப்பது, வாங்கி வெளியிடுவது, வெளியிட உதவுவது போன்ற உதவிகளை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்குத் தேவையான ஸ்டூடியோ நிர்மாணிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

 

இது பற்றிய விவரமான அறிவிப்பு ‘மனுஷனா நீ’ பட வெளியீட்டிற்குப் பிறகு வெளியாகும். நம்பிக்கையோடு வந்தவர்களை சென்னையும் சரி, தமிழ் சினிமாவும் சரி என்றுமே திருப்பி அனுப்பியதில்லை என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்திருக்கும் கஸாலி, “’மனுசனா நீ’ எனது முதல் படம் என்றாலும், எதிர்பார்த்ததை விட ரொம்ப திருப்தியாக வந்திருக்கிறது. அந்த வகையில் ஒரு இயக்குநராக நான் சந்தோசப்படுகிறேன். விரைவில் அந்த சந்தோசத்தை மக்கள் இன்னும் இரட்டிப்பாக்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தப் படம் வெளியான உடனேயே எனது அடுத்த படத்திற்கான வேலைகளும், மேலே குறிப்பிட்ட சிறு படங்களை வெளியிடும் முயற்சிகளும் தொடங்குவேன்.” என்று தெரிவித்துள்ளார்.