அஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு!
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்குப் பிறகு அஜித்தின் அடுத்தப் படத்தையும் தயாரிக்கும் போனி கப்பூர், அஜித்தை வைத்து இந்தி படம் ஒன்றையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ‘நேர்கொண்ட பார்வை’ வரும் ஆகஸ் 10 ஆம் தேதி வெளியிடப்படுவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான டிரைலருக்கு கிடைத்த வரவேற்பால் படத்தை முன் கூட்டியே வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் மீது காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரவீன் ஷ்யாம் என்பவர் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றுக்கொண்டு அதை இதுவரை திருப்பி தரவில்லை, என்று புகார் அளித்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரில், நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதாக கூறி போனி கப்பூர் தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றார். அதனை திரும்ப தரும்போது இரு மடங்காக தருவதாக கூறினார். ஆனால், தற்போது வரை நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடத்தவில்லை, எனது பணத்தையும் திரும்ப தரவில்லை, என்று தெரிவித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் போனி கபூர் மீது எழுந்துள்ள இந்த புகாரால் அவர் தயாரித்திருக்கும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு சிக்கல் எழும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.