பணச்செல்லாமையின் பின்னணியில் நடந்த மோசடிகளை சொல்ல வரும் ‘மோசடி’

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பணச்செல்லாமை அறிவிப்பு பின்னணியில் நடைபெற்ற பல்வேறு மோசடிகளை வெளிச்சம் போட்டு காட்ட வருகிறது ‘மோசடி’ என்ற திரைப்படம். ஜே.சி.எஸ் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜூ நாயகனாக நடிக்க, நாயகியாக பல்லவி டோரா நடித்திருக்கிறார். இவர்களுடன் அஜெய்குமார், என்.சி.பி.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், ஓ.எஸ்.சரவணன், மோகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷாஜகான் இசையமைக்க, மணி அமுதவன், கே.ஜெகதீசன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். எஸ்.எம்.வி.சுப்பு, கோபி ரா.நாத் எடிட்டிங் செய்ய, விமல் மற்றும் பாலா நடனம் அமைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கே.ஜெகதீசன் படம் குறித்து கூறுகையில், “இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.
கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பை பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்.” என்றார்.