நடிகர் சங்க தேர்தல்! - நீதிமன்ற உத்தரவால் விஷால் அணி கவலை

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிட்டது.
விஷால் மீது அதிருப்தியானவர்களால் உருவான சங்கரதாஸ் சுவாமிகள் அணிக்கு கே.பாக்யராஜ் தலைமை தாங்கினார். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தேர்தல் நடந்து முடிந்தாலும், முடிவு மட்டும் இதுவரை தெரியவில்லை.
நீதிமன்றம் அறிவிக்கும் நாளில் தான் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்பதால், விஷால் மற்றும் பாக்யராஜ் அணியினர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, தேர்தலில் மீண்டும் நாசர் தலைமையிலான அணி தான் வெற்றி பெறும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபட்டு வருவதால், அந்த அணியினர் உற்சாகத்தில் இருந்தனர். மேலும், வாக்கு எண்ணிக்கைக்கான தேதியை நீதிமன்றம் நேற்று அறிவிப்பதாக இருந்தது.
இந்த நிலையில், பெஞ்சமின் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நடிகர் சங்க தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷால் குழுவினர் நேரில் ஆஜராகி ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி தேர்தல் முடிவை வெளியிட தடை விதித்துள்ளார்.
இதனால், உற்சாகத்தில் இருந்த விஷால் அணியினர் கவலை அடைந்துள்ளனர்.