பிரபுதேவாவின் படத்தை கைப்பற்றிய நயன்தாரா நிறுவனம்!

நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அறம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். தொடர்ந்து பல வெற்றி படங்களை விநியோகம் செய்த இந்நிறுவனம் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தையும் விநியோகம் செய்து மாபெரும் வெற்றியை ஈட்டியது.
தொடர்ந்து நயன்தாராவின் படங்களை தயாரித்ததால் என்னவோ, இந்நிறுவனத்தை நயன்தாராவின் பினாமி நிறுவனம் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. அந்த வகையில் பார்த்தால், இந்த நயன்தாரா நிறுவனம் பிரபுதேவாவின் படத்தை கைப்பற்றியுள்ளது.
ஆம், பாலிவுட் சினிமாவில் ரசிகர்களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்று ‘தபாங்’. சல்மான்கான் நடிக்கும் இப்படங்களில் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில், சல்மான்கான் உள்ளிட்ட அதே தபாங் நடிகர், நடிகைகள் நடிக்கும் ‘தபாங் 3’ உருவாகி வருகிறது.
வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘தபாங் 3’ படத்தை தமிழகத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடும் உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இதுவரை தமிழ்ப் படங்களை தயாரித்து விநியோகம் செய்து வந்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கொட்டாபாடி ராஜேஷ், இனி பாலிவுட் சினிமாவில் தனது வெற்றி பயணத்தை தொடங்குவதோடு, மேலும் பல பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவும், விநியோகம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்.