Jun 25, 2019 11:31 AM

நடிகர் சங்க தேர்தலில் புது திருப்பம்! - கைதாகப் போகும் ஐசரி கணேஷ்?

நடிகர் சங்க தேர்தலில் புது திருப்பம்! - கைதாகப் போகும் ஐசரி கணேஷ்?

நடந்து முடிந்த தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் வாக்கு எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்குப் பிறகு நீதிமன்றம் அறிவிக்கும் நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த தேர்தலில் நாசர், விஷால் மற்றும் கார்த்தி தலைமையிலான அணிக்கு எதிராக ஐசரி கணேஷ் புதிய அணி ஒன்றை திரட்டி தேர்தலில் போட்டியிட்டார்.

 

இந்த நிலையில், நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கில் தலையீட்டதோடு, வழக்கை தள்ளி வைக்குமாறு நீதிபதியிடம் ஒருவர் மூலம் தூதுவிட்டிருப்பதாக நீதிபதி குற்றம் சாட்டியிருப்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

இது குறித்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் எனது வீட்டில் வழக்கு எண் 16949 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு எனது இல்லத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக காலை 11.55 மணிக்கு நீதிமன்றப் பதிவாளர் எனக்கு போன் செய்தார். நிகழ்ச்சி நிமித்தமாக வேலூர் சென்றிருந்த நான் அதை வேகமாக முடித்து விட்டு வீடு திரும்பினேன். அப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நெருங்கும்போது மணி 4.20. எனக்கு நன்கு அறிமுகமான ஆனந்தராமன் என்பவர் போன் செய்தார். தொடர்ந்து, மெதுவாக நடிகர் சங்க வழக்கு குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது, ”இந்த வழக்கில் ஐசரி கே கணேஷ் சம்பந்தப்பட்டுள்ளார். நடிகர் சங்கத்தின் பல பிரச்னைகளுக்கு உதவி செய்துள்ளார்” எனவும் தெரிவித்தார்.

 

”வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளி வைத்தால், தேர்தலையும் தள்ளிப் போட வசதியாக இருக்கும்” எனவும் தெரிவித்தார். எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் அவர் பேசியதால் அந்த போன் இணைப்பைத் துண்டித்து விட்டேன். நான் எனது இல்லத்தை அடையும் போது நேரம் 4.45 மணி. ஏற்கெனவே பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு என்பதால் எனது வீட்டின் முன் காவல்துறையும், பத்திரிகை ஆட்களும் இருந்தனர்.

 

இரண்டாம் தளத்தில் இருக்கும் எனது வீட்டை அடைவதற்குள் ஆனந்தராமனை லிஃப்ட் அருகே பார்த்தேன். மீண்டும் ஐசரி பற்றியும் வழக்கை ஒத்தி வைப்பது குறித்து பேசினார். நடிகர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் ஒருவரே நீதிபதியை தவறான முறையில் அணுகுவது அதிர்ச்சியாக இருந்தது. நீதிமன்ற வழக்கின் போக்கில் குறுக்கிட்டதால் ஏன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கக் கூடாது" எனக் கூறியுள்ளார்.

 

நீதிபதியின் இந்த அறிக்கையால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கி ஐசரி கணேஷ் கைது செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலில் ஐசர் கணேஷுடன் கூட்டு சேர்ந்த பாக்யராஜை சிலர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தற்போது ஐசரி கணேஷ் செய்திருக்கும் காரியத்தால், அவர்கள் அணி மீது சங்க உறுப்பினர்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.